மரங்களை விதைத்து.. மனங்களில் முளைத்த.. ஜனங்களின் கலைஞன் நீ.. சென்று வா விவேக்.. கமல் இரங்கல்
சென்னை: நடிகர் விவேக் விட்டுச் சென்ற விதைகள் மரமாக வளரும் என்றும் சமூகத்திற்காகக் கலையை பயன்படுத்தியவர்கள் தான் இறந்த பிறகும் ஆயுள் உள்ளவர்களாக இருப்பார்கள் என்றும் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தான் வெளியிட்டுள்ள வீடியோவில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த விவேக்கின் உடல் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. நடிகர் விவேக்கின் திடீர் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடிகர் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'அப்துல்கலாமின் இளவல்.. பசுமைக்காவலர்''.. நடிகர் விவேக்குக்கு புகழாரம் சூட்டிய கமல்ஹாசன்!
கமல் வெளியிட்ட வீடியோ
அதில் கமல்ஹாசன் பேசுகையில், "ஒரு கலைஞன் தன் திறமையால் தன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதும், மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு அளிக்கும் நபராக மட்டும் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருப்பது ஒரு வகையான கலைஞர்களைக் குறிக்கும். ஆனால், தன்னுடைய கலை சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டும். தனக்குப் பின்னும் அவர்கள் அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று நினைக்கும் கலைஞர்கள்தான், அவர்கள் இறந்த பிறகும் ஆயுள் உள்ளவர்களாக இருப்பார்கள். அப்படி என்எஸ்கே-வை சொல்லும்பொழுது விவேக்கின் பெயர் ஞாபகம் வராமல் இருக்காது.
விதைகள் மரமாக வளரும்
சின்ன கலைவாணர் என்ற பெயரை அவர் விரும்பி தனக்கு வர வேண்டும் என்று நினைத்து, அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டிருக்கும் முயற்சியில் இருக்கும் பொழுதே இறந்து போனார் என்பது தான் உண்மை. அவருக்குப் பிறகு, அவர் விட்டுச்சென்ற விதைகள் மரமாக வளரும். என்னைப் போலவே அவரும் அதைத் தக்க தருணத்தில் உணர்ந்தார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், இன்னும் எஞ்சிய வேலை நிறைய இருக்கும்போது, அவர் சென்றதும் எனக்கு மிக வருத்தமாக உள்ளது.
இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக்
அவருக்கு என் கூட நடிக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது.. ஏனென்றால், இருவருமே ஒரே பள்ளியிலிருந்து வந்த மாணவர்கள். ஒரே குருவின் பாதத்தைத் தொட்டு வணங்கியவர்கள். ஆனால் நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாக நடித்ததில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. அந்த மாதிரி விபத்துகள் இந்தத் துறையில் நடப்பது உண்டு. இதை நிவர்த்தி செய்ய வேண்டும் நீங்க அரசியலுக்குச் சென்றுவிட்டால் என்னுடன் நடிக்க முடியாமலே போய்விடும் என்றார். அதனால்தான் இந்தியன் 2ஆம் பாகத்தில் அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அப்போது நிறைய விஷயங்களை நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அந்த உரையாடல் அப்படியே நிற்கிறது.
விதைகளில் ஒன்று
அப்போது செய்ய வேண்டிய வேலைகள் என்று நாங்கள் சின்ன திட்டங்கள் போட்டிருந்தோம். இதையெல்லாம் அவர் போட்ட பதிகங்களில் விதைகளில் ஒன்றாக நான் எடுத்துக் கொண்டு, அதைத் தொடர வேண்டும் என்று நினைக்கிறேன். கலைஞர்கள் வாழ்க்கையைப் பொதுமக்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகப் பெரிய எடுத்துக்காட்டு விவேக். எந்த துறையானாலும் மக்களைத் தொட முடியும் என்பதற்காக ஒரு நிரூபணம் விவேக். இதுபோல நிறையக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இருக்கும் போதே போற்றப்பட வேண்டும். அப்படிப் போற்றப்பட்டவர் தான் விவேக்.
மிகவும் வருந்துகிறேன்
அவருக்கு வாழ்த்து சொல்லியே பழகிவிட்ட எனக்கு இரங்கல் சொல்லக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் இந்த நிலைமை வரும் என்பதனால் தயங்காமல் சொல்கிறேன். அவரது மறைவுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். இது போன்று கலைஞர்கள் இனியும் தோன்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஒரு நல்ல பிள்ளையை அனுப்பி வைக்கும்போது 'சென்று வா' என்று பெரியோர்கள் சொல்வார்கள்.
சென்று வா விவேக்
அது போல் நல்ல கலைஞர்களை நாம் அனுப்பி வைக்கும்போது 'சென்று வா, வேறொரு கலைஞனாக!" என்று சொல்ல வேண்டும். அப்படி விவேக் போன்ற ஒரு கலைஞர் மீண்டும் உருவாக வேண்டும். அதனால் சென்றுவா விவேக் என்று சொல்கிறேன். இது போன்ற பல கலைஞர்களை நாம் வழியனுப்பித் தான் ஆகவேண்டும். அப்போதெல்லாம் மீண்டும் அதேபோன்ற ஒரு கலைஞர் உருவாக வேண்டும் என்ற வாழ்த்துடன் அவர்களை வழி அனுப்பி வைக்க வேண்டும் என்று கமல் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.