நினைத்தது நடந்தது.. மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் எஸ்டிபிஐ.. 18 தொகுதிகளுக்கு கமல் க்ரீன் சிக்னல்
சென்னை: கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் , எஸ்டிபிஐ கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில், சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி , ஆகியவற்றுக்கு ஏற்கனவே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் எஸ்டிபிஐ கட்சி உடன் மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் தொடர்ந்து தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 தொகுதிகள்
எஸ்டிபிஐ கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய மக்கள் நீதி மய்யம் முன்வந்துள்ளதாகவும், இதை அந்த கட்சி ஏற்றுக் கொண்டு இருப்பதாகவும் , அந்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இதற்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் இரு கட்சிகளும் கையெழுத்திட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

3வது அணி
தமிழகத்தில் யார் தலைமையில் மூன்றாவது அணி என்பதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் மக்கள் நீதி மய்யம் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்பது, உறுதியாகத் தெரிகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அசாதுதீன் ஓவைசி கட்சி மூன்று தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

கமல் கட்சி கூட்டணி
இன்னொரு பக்கம் கமல்ஹாசன் தலைமையிலான அணியிலும் கட்சிகள் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. எஸ்டிபிஐ கட்சிக்கு கணிசமான இஸ்லாமிய வாக்கு வங்கி இருக்கிறது. தினகரன் கட்சி பக்கம் ஓவைசி கூட்டணி அமைத்துள்ள நிலையில் கமல்ஹாசன் கட்சியுடன் எஸ்டிபிஐ கூட்டணி அமைத்துள்ளது. திமுக கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட இஸ்லாமிய வாக்கு வங்கி அதிகமாக உள்ள கட்சிகள் உள்ளன.

வலிமையாகும் அணிகள்
யார் ஆட்சி அமைப்பார்கள், யார் எதிர்க்கட்சி என்பதை தாண்டி, யார் தலைமையிலான மூன்றாவது அணி வலிமையானது என்பதை நிர்ணயிக்கப் போகும் தேர்தலாக இந்த சட்டசபை தேர்தல் அமையப் போகிறது என்றால் அது மிகை கிடையாது.












Click it and Unblock the Notifications