இரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி?
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், ஆலந்தூர் மற்றும் கோவை தெற்கு என இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் இருந்து போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஏப்ரல் 6ஆம் ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இதனால் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. பல கட்சிகளிலும் உள்ள முக்கிய தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். மேலும், எந்தத் தொகுதியில் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெற முடியும் என்பதைக் கண்டறியும் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் வரும் சட்டசபை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆலந்தூர் மற்றும் கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட கமல் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மநீம அதிக வாக்குகளைப் பெற்ற தொகுதிகளைக் கமல் தேர்ந்தெடுத்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி. கடந்த முறை இங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை மநீம பெற்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சுமார் 1. 45 லட்சம் வாக்குகள் பெற்றிருந்தது. மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியில் வரும் மார்ச் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக தவிர கமலின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மூன்றாவது அணியும் உருவாகியுள்ளது. தற்போதுவரை மக்கள் நீதி மய்யத்துடன் சரத்குமாரின் சமக மற்றும் பாரிவேந்தரின் ஐஜேகே கூட்டணி அமைத்துள்ளது.












Click it and Unblock the Notifications