ஹேஹே.. கையில் தராதீங்க.. மேஜையில் வைங்க.. தொண்டர்களிடம் ‛வாள்' வாங்க மறுத்து ஆக்ரோஷமான கமல்ஹாசன்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. அப்போது தொண்டர்கள் கொடுத்த வாளை வாங்க மறுத்த கமல்ஹாசன், மேஜையில் வைத்து செல்லுங்கள் என்று ஆக்ரோஷமாக நடந்து கொண்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் ஐக்கியமானது.

அந்த சமயத்தில் மக்கள் நீதி மய்யத்துக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.
அதன்படி தற்போது தமிழகத்தில் காலியான ராஜ்யசபா எம்பிக்களுக்கு பதில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் போட்டி ஏதுமின்றி அவர் ராஜ்யசபா எம்பியாக தேர்வாகி உள்ளார். அடுத்த முறை நாடாளுமன்றம் கூடும்போது கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பியாக பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில் தான் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்க நிர்வாகிகள் திரண்டு வந்திருந்தனர். அவர்கள் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பூங்கொத்துக்கு பதில் புத்தகங்களை கொண்டு வரும்படி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருந்தது.
அதன்படி பெரும்பாலானவர்கள் புத்தகங்களை கமல்ஹாசனிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்த வேளையில் தொண்டர்கள் சிலர், ‛வாள்' ஒன்றை மேடையில் எடுத்தார். அதனை பார்த்து கமல்ஹாசன் ஒரு நொடி அதிர்ச்சியடைந்தார். அந்த வாளை தொண்டர்கள் சிலர் கமல்ஹாசனின் கையில் வழங்கினார். அதனை கமல்ஹாசன் ஏற்கவில்லை.
வாளை மேஜையின் மீது வையுங்கள் என்று ஆக்ரோஷமாக சைகை காட்டினார். ஆனால் தொண்டர்கள் கேட்கவில்லை. கமலும் தனது மனதை மாற்றவில்லை. இதையடுத்து தொண்டர்கள் அந்த வாளை மேஜையில் வைத்தனர். அப்போது தொண்டர்களை நோக்கி கமல்ஹாசன் கோபத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து அங்கிருந்த போலீஸ் அதிகாரி தொண்டர்களை மேடையில் இருந்து கீழே இறங்கும்படி கூறி அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications