திமுக கூட்டணியில் கமல்? காங்கிரசுக்கு நெருக்கடி? மதிமுக, விசிக திடீர் முடிவு?
சென்னை: திமுக அணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைப்பது உறுதியாகி உள்ளது.
திமுக அணியில் பெரிய மாற்றங்கள் இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இடம்பெற்ற கட்சிகள் அப்படியே இந்த 2024 தேர்தலிலும் தொடருகின்றன. இந்தக் கூட்டணியில் ஒரே ஒரு விக்கெட்தான் விழுந்துள்ளது. அதுவும் எதிர்பார்த்த ஒன்றுதான்.

கடந்த மக்களவைத் தேர்தலில் காலைவரை பாஜக கூட்டணியிலிருந்துவிட்டு, மாலை திமுக கூட்டணிக்குள் புகுந்தது ஐஜேகே. அப்போதே அவர் சீட்டு வாங்கிக் கொண்டு, வெற்றி பெற்றதும் பாஜக பக்கம் போய்விடுவார் என்றார்கள். பலரும் கணித்ததைப் போலவே திமுக சின்னத்தில் நின்ற பாரிவேந்தர் பச்சமுத்து அடுத்த நாளே பாஜக பக்கம் மனதைப் பறிகொடுத்துவிட்டார்.
திமுக கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் ஒருமுறை கூட அவர் ஒப்புக்கு இடம்பெறவில்லை. திமுக சின்னத்தில் வென்ற அவர், திமுக கடுமையாக எதிர்க்கும் நீட் தேர்வு முறை ஆதரித்து வந்தார். அதைப் போல பல பிரச்சினைகள். திமுகவின் குரலாக அவர் ஒலித்ததே இல்லை.

அவர் வெற்றி பெற்றது முதல் மோடி ஆதரவாளராகவே இருந்து வந்தார். இப்போது பெரம்பலூர் தொகுதியில் பாஜக தாமரை சின்னத்தில் அவர் போட்டியிட உள்ளார்.
ஆக, திமுக அணியில் ஒரு இடம் மட்டும் காலியாக உள்ளது. அந்த நாற்காலியைத் தான் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பிடிக்க உள்ளது என்கிறார்கள். அந்த ஒரு இடம்கூட திமுக தரப்பிலிருந்து வழங்கப்பட உள்ளதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் சீட்டில் ஒன்றைக் குறைத்துக் கொண்டு, அதை மநீமவுக்கு கொடுக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள்.

காங்கிரஸ் தனது பங்கிலிருந்து ஒரு சீட்டை கமல்ஹாசனுக்கு விட்டுக் கொடுத்தால், அவர் கை சின்னத்தில் நிற்கவேண்டும் எனக் கூறி வருவதாகச் சொல்கிறார்கள். அதற்குக் கமல் பெரியதாக மறுப்பார் எனத் தெரியவில்லை. அவர், ராகுலுடன் இணக்கமாகவே இருந்து வருகிறார். கை சின்னமும் நல்ல அறிமுகமான சின்னம்தான். அதை அவர் ஏற்றுக் கொள்வார் என்றே அந்தத் தரப்பிலிருந்து தகவல் வருகிறது.
இப்போதைக்கு எத்தனை சீட்டு என முடிவு செய்வதிலேயே திமுக கூட்டணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம், கடந்த முறை விசிக இரண்டு இடங்களில் நின்றது. இந்தமுறை அக்கட்சி 4 இடங்களைக் கேட்கிறது. அதில் பொதுத் தொகுதிகள் 2.
அதைப் போல காங்கிரஸ் கடந்த முறை வழங்கப்பட்ட எண்ணிக்கையை விடக் கொஞ்சம் அதிகம் கிடைத்தால், சிறப்பாக இருக்கும் என வாதிட்டு வருவதாகத் தெரிகிறது. அதற்குக் காரணம், காங். மாநிலத் தலைமை மாற்றம். செல்வப் பெருந்தகை முன்பு இருந்த அழகிரியைப் போல மென்மையானவர் இல்லை. ஆகவே, அவர் கொஞ்சம் கண்டிப்புக் காட்டுவதாகச் சொல்கிறார்கள்.

கடந்த மக்களவையில் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் நடந்தது. அவர் தனித்து நின்றார். திமுகவைக் கடுமையாக விமர்சித்தார். அவரது கட்சி சார்பான தேர்தல் விளம்பரத்தில் டிவியை உடைத்தார். ஸ்டாலினுடன் நேரடியாக மோதினார். அவர் திமுக அணியில் இடம்பெற்றால் சில விமர்சனங்கள் எழலாம் எனக் கூட்டணிக்குள் ஒரு சில குரல்கள் ஒலிப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள்.
மேலும் கமல் கூட்டணியில் நின்று வென்ற பிறகு, தனி கடை போட்டுவிடுவார். அதனால் கருத்து மோதல்கள் வரலாம். சலசலப்பு வரும் என திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் ஸ்டாலினின் காதில் ஒரு தகவலைப் போட்டு வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு ஐஜேகேவிடம் பாடம் கற்றதே போதும். கமல் வேண்டாம் என்றும் கூட்டணியில் சிலர் சொல்கிறார்களாம்.
இன்னொரு பக்கம் திமுக தலைமை ஒரு கணக்குப் போட்டுவருகிறது. 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்றால், 40% வாக்குகள் தேவை. அப்படி என்றால், வாங்கு வங்கியே இல்லாத ஐஜேகேவுக்கே ஒரு சீட்டு திமுக வாரி வழங்கிய போது, மநீக அதைவிடக் குறைவா என்ன? இன்னும் கூடுதலான இடங்கள் அளித்தால் போகலாம் என மநீம நிர்வாகிகள் அடித்துப் பேசுகிறார்களாம்.
கடந்த முறை 53% வாக்குகளை திமுக பெற்றிருந்தது. அப்போது எதிர்க்கட்சி. இப்போது ஆளும் கட்சி. ஆட்சியின் மீது சில விமர்சனங்கள் உள்ளன. ஆகவே குறைந்தது 10% வாக்குகள் சரியலாம்.
அதன்பின்னர் கடந்த முறை கூட்டணியிலிருந்த சில கட்சிகள் திமுக சின்னத்தில் நின்றனர். இந்த முறை அதில் கூட்டணிக் கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை. அதுவும் திமுகவுக்குப் பலவீனமாக அமைந்துள்ளது.
குறிப்பாக மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் உதயசூரியனில் நிற்கத் தங்குகின்றன. அதற்குக் காரணம், திமுகவில் உதயநிதி வழியே இளம் தலைமுறை கட்சியின் தலைமைக்கு வந்துவிட்டனர். அப்படி உள்ளபோது மதிமுக, விசிக ஒரு தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் எனத் திட்டமிட்டு வருகின்றன.
இதை எல்லாம் சமாளித்து பின்னர்தான், கமல்ஹாசனுக்குக் கதவு திறக்கப்படும். அப்படித் திறக்கப்படும் போது மநீமவின் மனநிலை என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. கசப்புகளுடன் கூட்டணிக்குள் போனால் ஒட்டு பகிர்வு என்பது அவ்வளவு இயல்பாகப் பரிமாற்றமாகாது.
அப்படித்தான், பொருந்தாத கூட்டணியாக அதிமுகவுக்குள் விஜயகாந்த் போனார். ஜெயலலிதாவும் வென்றார். விஜயகாந்த்தும் எதிர்க்கட்சித் தலைவரானார். பிறகு வெற்றிக்கு யார் காரணம் என்ற சண்டை தொடங்கியது. இந்தப் போரில் விஜயகாந்த் மக்கள் மத்தியிலிருந்த செல்வாக்கை இழந்தார். அந்தக் கட்சி தரை மட்டமாகக் கடந்த பல தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்தது.
ஆக, திமுக எதிர்ப்பில் தொடங்கிய கமல்ஹாசன் திமுகவில் ஐக்கியமாவதன் மூலம் வருங்காலத்தில் அவரது அரசியல் களம் கேள்விக்குறியாக மாறலாம் என்றும் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications