"ஆன்டி இந்தியன்" சொல்லை கேட்டு டிவியை உடைத்த கமல் ஹாசனுக்கு ஒரு திறந்த மடல்
Recommended Video
சென்னை: அதான் நேராவே சொல்லிட்டீங்களே, இவங்களுக்கு ஓட்டு போடாதீங்கன்ணு, அப்புறம் ஏன், ரிமோட்டை தூக்கி போட்டு டிவியை ஒடைச்சு யூடியூர்ன் அடிக்கிறீங்க கமல் சார். உங்க வார்த்தைகளை நம் மக்கள் கேட்பார்களா என்று தெரியவில்லை.. ஆனால் இப்படியெல்லாம் செஞ்சீங்கன்னா உங்களை "ஆன்டி இந்தியன்" என்று சொல்லி ஒரு குரூப் கிளம்பி விடும்.
நீங்க இந்தியன் 2 படத்துல நடிச்சா, அய்யோ கமல் சார் என்னாமா நடிக்கிறாரு, லஞ்சம் வாங்குறவங்கள வெளுக்கிறார், ஊழல் செய்றவங்களை கொல்றாரு. இவனுங்களை எல்லாம் இப்படித்தான் கொல்லனும்ணு ஆவேசப்படுவாங்க. அப்படியே உங்கள மாதிரி ஒருத்தர் தான் நாட்டை ஆளனும்ணு உணர்ச்சி வசப்படுவாங்க.
ஆனால் படம் முடிஞ்சு வெளிய வந்தா, பெட்டிக்கடையில நின்னு தம்மடிச்சுகிட்டு, அப்புறம் மச்சி, இன்னைக்கு நம்ம தலைவரு பிரச்சாரத்துக்கு வர்றாராம். போனா 200 ரூபாய் பணமும், குவாட்டர், பிரியாணியும் கிடைக்கும் என்ன பண்ணலாம் என விசாரிப்பவர்களே அதிகம். இதுதான் எதார்த்தம்.. இது "இந்தியன் தாத்தா"வுக்கும் கூட தெரிந்த விஷயம்தான்
நீட் தேர்வு
பணக்காரர்களுக்கு உரிய எம்பிபிஎஸ் படிப்பை படிக்க போராடி, தோற்ற அனிதாக்களை பெற்ற அப்பாக்கள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கலாம். ஆனால் இவர்களுக்கு மட்டுமே மாற்றி மாற்றி ஓட்டுப் போட்டு மாற்றம் பற்றியே சிந்திக்காத, சிந்திக்க முடியாதவர்களை எப்படி கமல்ஹாசன் தன் பக்கம் திருப்ப போகிறார், திருத்தப் போகிறார்..
எம்ஜிஆர் மந்திரம்
உங்களுக்கு இரண்டு உதாரணம் சொல்கிறேன், எங்க வீட்டு பக்கத்தில் ஒருவர் 50 வயதை கடந்தவர், இவரிடம் யாருக்கு ஓட்டு என்று கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு இரட்டை இலை என்றார். ஏன் என்று கேட்டால், எம்ஜிஆரின் கட்சி, அதனால் அவருக்கு தான் ஓட்டுபோடுவேன் என்றார். அவர் உங்களுக்கு என்ன செய்தார் என்று கேட்டால், அவர் சிறுவயதாக இருக்கும் போது எங்க ஊருக்கு வந்தார். எங்க பாட்டிக்கு அன்றைக்கே 100 ரூபாய் கொடுத்தார் என்றார். அந்த 100 ரூபாய் இன்றைக்கும் பத்திரமாக வைத்துள்ளார்களாம்..
குக்கிராமங்களில் எம்ஜிஆர்
இத்தனைக்கும் அவர் பிரச்சாரத்திற்கு வரவில்லையாம். நல திட்ட உதவிகளை வழங்க வந்தாராம். பஸ்ஸே இன்றும் வராத எங்க ஊருக்கு வந்த முதல் சிஎம்மும் அவர்தான் என்றார். எம்ஜிஆர் பல குக்கிராமங்களுக்குள் சென்று அவர்களின் ஆழ்மனதில் ஊடுருவியவர். எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கத்தை ஓபிஎஸ், ஈபிஎஸ் அல்ல யார் தலைமை பொறுப்பில் இருந்தாலும், இரட்டை இலை என்ற சின்னத்தை மட்டுமே மக்கள் பார்ப்பார்கள். அப்படிப்பட்ட அடிமட்ட ஏழைகள் தங்கள் வாழ்க்கையில் என்றோ எம்ஜிஆரால் ஏற்பட்ட மாற்றத்தால் காலத்துக்கும் அவருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.
வேலை கொடுத்தார்
கருணாநிதியை பற்றி உதாரணம் சொல்கிறேன். எங்கள் பக்கத்து ஊரில் ஒருவர் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் பரிதவித்தபடி வறுமையில் இருந்துள்ளார். அப்போது கருணாநிதி சிஎம்ஆக இருந்த சமயம், அந்த பெண் நான் 10வது படித்துவிட்டேன், எனக்கு அரசு வேலை ஏதாவது கொடுத்தால் பிள்ளையை படிக்க வைத்துவிடுவேன் என்றார். உடனே கருணாநிதி அந்த பெண்ணுக்கு அன்றே அரசு வேலை கொடுக்க உத்தரவிட்டார். அதன் பிறகு அந்த குடும்பத்தினர் அனைவரும் காலத்துக்கும் கலைஞருக்குதான் ஓட்டு போட்டு வருகிறார்கள்.
வேலையில் உள்ளோர்
இந்த உதாரணங்களை சொல்ல காரணம், இதில் மெல்லிய கோடு உள்ளது. படித்த நடுத்தர மற்றும் அரசு வேலையோ தனியார் வேலையில் உள்ளவர்களோ பலர் கருணாநிதியை விரும்புவார்கள். ஏனெனில் அவர்களின் நலனுக்காக அவர் ஏராளமான விஷயங்களை செய்துள்ளார். அதற்காக ஏழைகளுக்கு அவர் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்ல வரவில்லை.
கொஞ்சம் கடினம்
இதேபோல் பேஸ்புக், வாட்ஸ் அப் எட்டாத தூரத்தில் இருக்கும் அடித்தட்டு ஏழைகள், இங்கு நிம்மதியாக வாழ ஒரு வலுவான அடித்தளத்தை அதிமுகவை ஆரம்பித்த எம்ஜிஆர் உருவாக்கிவிட்டு சென்றார். இதனால்தான் அவரை கொண்டாடி வருகிறார்கள். எனவே கருணாநிதி எம்ஜிஆரை தாண்டி, இங்கு மக்களிடம் யார் தலைவராக வேண்டும் என்றாலும் கொஞ்சம் கடினம் தான்.
இதுதான் நிதர்சனம்
இதுதான் தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் நிதர்சனம். கமல்ஹாசனிடம் எழுந்துள்ள கோபம் அவரைப் போன்ற பல லட்சம் தமிழக மக்களின் கோபமும் கூட. ஆனால் டிவியை உடைப்பது தீர்வுக்கு உகந்தது அல்ல.. அதுவும் கூட ஒரு வகையில் வன்முறைப் பாதைதான். மக்களுக்கு இன்று தேவை வன்முறை அல்ல.. நல்லதொரு மாற்றம். அதை கமல்ஹாசன் கொண்டு வர வேண்டும். தனது கோபத்தை டிவியில் காட்டாமல் அதை ஆக்கப்பூர்வமாக மக்களிடம் கொண்டு சென்று மக்களை விழிப்புணர்வு பெறச் செய்வாரேயானால் அது மிகப் பெரிய, உண்மையான மாற்றத்திற்கு வழி கோல உதவும்.
முழுமையாக இறங்குங்கள்
அதை விட முக்கியமானது கமல்ஹாசன் யாருடைய ஆதரவையும் எதிர்பாராமல், மக்களுக்காக, முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும். மக்களை அடிக்கடி சந்திக்க வேண்டும். மக்களின் போராட்டங்களில் துணை நிற்க வேண்டும். மக்களுக்கான முதல் குரல் அவருடையதாக இருக்க வேண்டும். குறுகிய கால வெற்றியை பொருட்படுத்தாமல் மக்களை வெற்றி பெற வைத்து அதில் சந்தோஷப்படும் அரசியல்வாதியாக அவர் மாறினால்.. டிவியை உடைக்க வேண்டிய அவசியம் வராது.. மாறாக வெற்றிப் பட்டாசுகளை வெடிக்கும் வாய்ப்பு கை கூடும்.