யார் விலகினால் என்ன.. நான் யார் என்று தெரிகிறதா.. தில்லாக இருக்கும் கமல்!
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து தொடர்ச்சியாக நிர்வாகிகள் வெளியேறிவருவது அவருக்கு பெருத்த வருத்தத்தை கொடுத்தாலும் கூட தனது நிலைப்பாட்டில் அவர் சமரசம் செய்து கொள்ளாமல் தில்லாக களத்தில் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.
நடிகர் கமல் கட்சி ஆரம்பித்து ஓராண்டு முடிந்துள்ள நிலையில் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளார். தனித்து களம் காண உள்ளோம் என்று கூறிய நிலையில் இந்திய குடியரசு கட்சியை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அவரைது கட்சியில் இருந்து நிர்வாகிகள் வெளியேறி வருவது அவருக்கு மன வருத்தத்தை கொடுத்துள்ளது.

பிரபல அழகு நிறுவனமான நேச்சுரல்ஸ் நிறுவன அதிபர் குமரவேல் அக்கட்சியிலிருந்து நேற்று முன்தினம் வெளியேறினார். குமரவேல் வெளியேறியதும் அவரைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட வடக்கு மண்டல பொறுப்பாளர் வெங்கடேஷ் கட்சியை விட்டு வெளியேறியுள்ளார். கட்சியில் இருந்து வெளியேறியது தொடர்பாக மய்யத்திற்கு ராஜினாமா கடிதம் எழுதிய அவர் தானும் குமாரவேலும் 32 ஆண்டுகால நண்பர்கள் என்றும் அவரால்தான் மக்கள் நீதி மையத்திற்கு வந்ததாகவும் இப்போது அவர் விலகிவிட்ட நிலையில் தானும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

இவரையடுத்து கடலூர் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் நவீனும் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அடுத்ததாக அந்தக் கட்சியின் பொருளாளர் சுகாவும் பதவி விலகி விட்டதாக உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் கூறுகின்றன.
கட்சி தொடங்கி ஓராண்டு மட்டுமே நிறைவு செய்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றே கமலிடம் பலரும் யோசனை கூறியுள்ளனர். ஆனால் தன்னை டிவிட்டர் அரசியல்வாதி என்று தொடர்ந்து விமர்சித்து வந்தவர்கள் தேர்தலில் நிற்க தைரியம் இல்லை என்று மேலும் விமர்சிப்பார்கள் என்று கமல் கூறினாராம்.
இந்த நிலையில் கட்சி ஆரம்பித்த ஓராண்டில் அதுவும் கட்சி போட்டியிடும் முதல் தேர்தல் நேரத்தில் இப்படி நிர்வாகிகள் வெளியேறி வருவது கமலுக்கு கவலையை கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள் . அதேசமயம், இன்று அதிரடியாக தனது கட்சியின் 21 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கமல் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் யார் விலகினாலும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து திறம்பட செயலாற்றும் என்பதை அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications