அரசியலில் இது சுற்றுப்பயண சீசனா? அடுத்து வண்டியில் ஏறும் தலைவர்.. ஜூலை 17ல் முக்கிய முடிவு!
சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தனது கட்சிப் பணிகளில் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். விரைவில் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார்.
கமல்ஹாசன் தலைமையில் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் வரும் ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சுற்றுப் பயணத் திட்டம் இறுதி செய்யப்படும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம்
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கமல்ஹாசன் உட்பட மக்கள் நீதி மய்யம் கட்சியின் அத்தனை வேட்பாளர்களும் தோல்வியடைந்தது கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து முக்கிய தலைவர்கள் பலரும் கட்சியில் இருந்து வெளியேறினர். இது மநீம தொண்டர்கள் மத்தியில் பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. கமல்ஹாசனும் கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாமல், சினிமாவில் கவனம் செலுத்தினார்.

மந்தம்
2024 நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து மற்ற கட்சிகள் செயல்பட்டு வரும் நிலையில், சினிமாவில் பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் விரைவில் அரசியல் பணிக்குத் திரும்பவேண்டும் என கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்த்தனர். இதையடுத்து பல்வேறு திட்டங்களுடன் அரசியல் களத்தில் பணியாற்ற மீண்டும் தீவிரமாகி வருகிறார் கமல்ஹாசன்.

மீண்டும் அரசியல் பணியில் வேகம்
முழு உழைப்பையும் போட்டு நடித்த 'விக்ரம்' படத்தின் வெற்றி கொடுத்த உத்வேகத்தில் கமல்ஹாசன், கட்சிப் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை தலைவர்கள், மாநில செயலாளர்கள் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சுற்றுப்பயண திட்டம்
இந்தக் கூட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவது, மக்கள் நீதி மய்யம் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய களப்பணிகள் குறித்து விரிவாக ஆலோசித்துள்ளனர். 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற முழக்கத்தோடு பல கட்டங்களாக தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் பயணத்தை தொடங்க விரும்புவதாக கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தொண்டர்கள் உற்சாகம்
இந்த சுற்றுப் பயணத்தை எங்கிருந்து தொடங்கலாம் என்பது பற்றி கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து திட்டமிட வேண்டும் என்றும் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். கமல் மீண்டும் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது, அவரது கட்சித் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 17ஆம் தேதி
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் வரும் ஜூலை 17ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் கமல்ஹாசனின் சுற்றுப் பயண திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிடப்படும் எனக் கூறப்படுகிறது.

எங்கிருந்து தொடங்கும்?
தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் முடிவை எடுத்திருந்தாலும், எங்கிருந்து பயணத்தை தொடங்குவது, எங்கு முடிப்பது, சுற்றுப் பயணத்தின் ஷெட்யூல் என எதுவும் முடிவு செய்யப்படவில்லை. இந்தக் கூட்டத்திலேயே அதுகுறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டு கமல்ஹாசன் முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.

சுற்றுப்பயண சீசன்?
முதல்வர் ஸ்டாலின், தொடர்ச்சியாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று வருகிறார். அதிமுகவில் நிலவி வரும் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் மோதலுக்கு மத்தியில் சசிகலா, தனது அரசியல் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வமும் தனது சுற்றுப்பயணத்தை விரைவில் தொடங்கி, தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், கமல்ஹாசனும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். தமிழக அரசியல் களத்தில் இது சுற்றுப்பயண சீசனோ என்ற சந்தேகத்தை எழச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications