சீமான் ஏன் இப்படி பேசணும்.. 3 நடிகர்களின் ரசிகர்கள் கொந்தளிப்பு.. வாக்குகளில் அடி விழுமோ?
சீமான் மீது விஜய், கமல் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் சீமானின் பேச்சுக்கு எதிராக 3 தரப்பினர் கொந்தளித்து போய் உள்ளனர்.. சீமான் தந்த ஒற்றை பேட்டியால் அவருக்கு எதிரான அதிர்வலைகள் தமிழகத்தில் தோன்றி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவருகிறது.. அதனால், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.... வழக்கம்போல அதிமுக - திமுகவிடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
கமல் ஒரு பக்கம், சீமான் ஒரு பக்கம் இறங்கி உள்ளனர்... இதற்கிடையில், ரஜினியும் கட்சி துவங்குவதாக சொல்லி உள்ளார்.. இந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான வழக்கில் சீமான் நேற்று சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜரானார்.
கல்வி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார் எம்ஜிஆர்.. அதனால் அவரை மதிக்கிறோம். மற்றபடி எம்ஜிஆர் என்ன சிறந்த ஆட்சியை தந்தார்? கல்வியையும் மருத்துவத்தையும் தனியாருக்கு கொடுத்தது எம்.ஜி.ஆர். முல்லை பெரியாறு உரிமையை கேரளாவிற்கு கொடுத்தது எம்ஜிஆர்..
பயப்பட வேண்டும்
பிரச்சாரத்தில் எம்ஜிஆர் பற்றி பேசினால், அதிமுகவுக்குதான் ஓட்டு போடுவார்கள்... அரசியலே தெரியாமல் பேசும் கமல் மக்களை கேவலமாக நினைக்கிறார். தேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்கும் கிடைக்கும் அடி, எந்த நடிகர்களும் அரசியலுக்கு வரவே பயப்பட வேண்டும். அவர்களை அடிக்கிற அடியில் வேறு விஜய் கூட அரசியலுக்கு வர பயப்பட வேண்டும்" என்றார்.
கமல்
சீமான் பேசிய பேச்சு மொத்தம் 3 தரப்பினரை கொந்தளிக்க வைத்து வருகிறது... கமலை பொறுத்தவரை, நாளை நமதே என்ற முழக்கத்துடன்தான் தேர்தலை சந்திக்கிறார்.. எம்ஜிஆரின் மடியில் வளர்ந்தவன் நான்.. எம்ஜிஆர் எங்கள் சொத்து என்று பிரச்சாரத்தில் பேசி வருபவர்.. சில சமயம் எம்ஜிஆர் பாட்டை பாடியும் வருபவர்.. இதுபோன்ற சூழலில் கமலை நேரடியாகவே சீமான் பேசியது அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது..
மய்யம்
அதுமட்டுமல்ல, இப்போதுள்ள அரசியல் கட்சி தலைவர்களில் எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன் என்பதை கமல் தவிர வேறு யாரால் சொல்ல முடியும்? அவர் சொல்வதில் என்ன தவறு உள்ளது என்று கேட்கின்றனர் மய்ய உறுப்பினர்கள். கமல் கட்சி ஆரம்பித்ததும், ஆழ்வார்பேட்டை ஆபீசில் ஓடிச்சென்று சந்தித்த சீமானா இப்படி பேசுவது என்ற அதிருப்தி மய்யம் தரப்பில் இருந்து எழுந்து வருகிறது.
அதிமுக
அதேபோல, எம்ஜிஆரை எப்படி சீமான் குறை சொல்லலாம் என்று ரத்தத்தின் ரத்தங்கள் கொந்தளித்து போய் உள்ளன.. "எம்ஜிஆர் என்ன சிறந்த ஆட்சியை தந்தார்?" என்று சீமான் கேட்கிறாரே, பிரச்சாரத்தில் எம்ஜிஆர் பற்றி பேசினால், அதிமுகவுக்குதான் ஓட்டு போடுவார்கள் என்று சீமானே சொல்கிறாரே, அப்பறம் என்ன? அதுதான் எம்ஜிஆரின் ஆட்சி. இப்போதுவரை ஒருத்தர் விடாமல் எம்ஜிஆரை துணைக்கு இழுத்து கொள்கிறார்களே, அதுதான் எம்ஜிஆர்" என்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.
விஜய்
இதில் உச்சக்கட்ட கொந்தளிப்பில் உள்ளது விஜய் ரசிகர்கள்தான்.. காரணம், "என் தம்பி விஜய், என் தம்பி விஜய்" என்று பெரும்பாலான பாட்டிகளில் சீமான் புகழ்ந்து பேசியிருக்கிறார்.. அவ்வளவு ஏன், ஆரம்பத்தில் விஜய்யின் நடிப்பையும் அவருக்கு இருக்கும் ரசிகர் பலத்தையும் ரஜினிகாந்தோடு ஒப்பிட்டு பாராட்டி வந்தவர்தான் சீமான்.. ஆனால், "கமலுக்கு கிடைக்கும் கிடைக்கும் அடி, எந்த நடிகர்களும் அரசியலுக்கு வரவே பயப்பட வேண்டும். அவர்களை அடிக்கிற அடியில் வேறு விஜய் கூட அரசியலுக்கு வர பயப்பட வேண்டும்" என்று சொன்னது விஜய் ரசிகர்களும் அதிர்ச்சியை உண்டு பண்ணி வருகிறது... சீமான் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
போஸ்டர்
இது தொடர்பாக மாநிலம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது... அதில், "கொள்கை இல்லாத சீமானே.. எங்கள் தளபதியை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது? உங்களுக்கு மட்டுமே அடிக்க, வெட்ட தெரியும் என்று நினைத்து விடாதீர்கள் சத்தமே இல்லாம சுத்தமா செய்வோம், "ஜில் ஜங் ஜக்" சீமானே உடனடியாக மன்னிப்பு கேள்" என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. ரசிகர்கள் சீமானுக்கு எதிரான ஹேஷ்டேக் ஒன்றை இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகிறார்கள். விஜய் ரசிகர்களின் இந்த எதிர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீமான் உறுதி
ஒரே பேட்டியில் அதிமுக, விஜய், கமல் என்ற 3 தரப்பினரின் அதிருப்தியை சம்பாதித்தாலும், ஒன்றே ஒன்று மட்டும் இதில் தெளிவாகிறது.. அரசியலுக்கு வருபவர்கள் மக்கள் பிரச்சனைகளுக்காக களத்தில் இறங்கி போராட வேண்டுமே தவிர திரைத்துறையில் நடித்து அதன்மூலம் கிடைக்கும் செல்வாக்கை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது என்ற சீமானின் வலியுறுத்தல் தற்போதும் தொடர்கிறது என்பதும், அரசியல் களம் என்று வந்துவிட்டால் நாட்டை ஆள நடிகர்கள் தேவையில்லை என்ற கருத்தில் சீமான் இந்த நிமிஷம் வரை உறுதியாக இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது..