"டோட்டலா உல்டா".. பாஜக கருவியும், கவர்னரும், ஆட்டுக்கு தாடியும்.. ராயபுரத்தில் கொதித்த திமுக கனிமொழி
ஆளுநரின் வெளிநடப்பு குறித்து திமுக எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: "பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து மாநில அரசுக்கு, மத்திய அரசு இடையூறு விதித்து வருகிறது. ஆளுநர் பதவியையே எதிர்க்கட்சி பதவி போல மாற்ற நினைக்கிறார்கள்" என்று தன்னுடைய கண்டனத்தையும் திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் தமிழக ஆளுநர் ரவி உரையுடன் நேற்று தொடங்கியது. பேரவைக்கு வருகை தந்த ஆளுநருக்கு திமுக கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக மற்றும் பாமக எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இதனையடுத்து தன்னுடைய உரையை வாசிக்க தொடங்கிய ஆளுநர், தமிழ்நாடு, அமைதிப்பூங்கா,சமூகநீ்தி, சுயமரியாதை, பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை வாசிக்க மறுத்து, அடுத்த பக்கங்களுக்கு சென்றார்.
விஜய் அஜித் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம்! பால் தயிரை ரசிகர்கள் ஆட்டைய போடலாம்! வார்னிங் தரும் தலைவர்
ஷாக் நகர்வு
இதை பார்த்துவிட்டு, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே அதிர்ச்சி அடைந்தன. ஆளுநர் பேச்சுக்கு , உடனடியாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.. தமிழக அரசு ஒப்புதல் அளித்த வாக்கியங்கள் மட்டும் சட்டசபை அவைகுறிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தீர்மானம் கொண்டு வந்தார்... இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்... ஆளுநரின் இந்த செயல்பாடுகளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தன... தேசிய கீதத்துக்கு முன்பே ஆளுநர் வெளிநடப்பு செய்ததால், அவர் தேசியகீதத்தை மதிக்கவில்லை என்றும் புகார் கூறப்பட்டது..
கமல்ஹாசன்
நேற்று முழுவதும் இந்த சம்பவம் தமிழகத்தையும் தாண்டி தேசிய அளவிலும் எதிரொலித்தது.. மற்றொருபுறம், திமுக மற்றும் அதன் கூட்டணி அல்லாத, கமல்ஹாசன், டிடிவி தினகரன், உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் ஆளுநரின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.. "அறிஞர் அண்ணா சொன்னதைப் போல, ஆளுநர் பதவி தேவையில்லை என்பதுதான் எங்களுடைய நிலைபாடு. மரபுகளை உடைத்துவிட்டு, சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையில் ஆளுநர் நடந்துகொண்டதும் சரியானதல்ல" என்பது போன்ற கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்..
GET OUT RAVI
அதேபோல, தமிழக ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில், சென்னையில் பல்வேறு இடங்களில் #Get Out Ravi என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களையும் திமுகவினர் சென்னை முழுக்க ஒட்டிவிட்டனர்.. இன்று காலையிலேயே இந்த போஸ்டர்கள் அனைத்தும் பரபரப்பை ஏற்படுத்தி, ட்விட்டலும் முதலிடத்தில் டிரெண்டாகிவிட்டது.. இதனிடையே, திமுக எம்பியும், துணை பொதுச்செயலாளருமான கனிமொழி பதிவிட்ட ஒரு ட்வீட் 2வது நாளாகவும் இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆளுநரின் செயல்பாட்டை வெளிப்படையாகவே விமர்சித்த நிலையில், கனிமொழி மட்டும், அண்ணா வாசகத்தை பதிவிட்டிருந்தார்.
ஆட்டுக்குட்டி
"ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்கு கவர்னர் எதற்கு?"- பேரறிஞர் அண்ணா என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ஏராளமான திமுகவினர் திரண்டு வந்து, "ஆட்டுக்குட்டியும் வேண்டாம், ஆட்டுக்கு தாடியும் வேண்டாம்" என்று கமெண்ட்களை பதிவிட்டு ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ராயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சமத்துவ பொங்கல்விழா திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்பித்த கனிமொழி எம்பி, இறுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ஆளுநரின் செயல்பாட்டுக்கு கண்டனத்தை தெரிவித்தார்.
அப்பட்டமான மீறல்
அதில், "சட்டமன்றத்தில் இருந்தோ அல்லது நாடாளுமன்றத்தில் இருந்தோ எதிர்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்வார்கள். ஆனால் இங்கு கவர்னரே வெளிநடப்பு செய்திருக்கிறார். அவர் எதிர்கட்சியாக செயல்படுகிறார் என்பதையே அவரின் வெளிநடப்பு உணர்த்துகிறது. கவர்னரை தூண்டி விட்டு செயல்படுபவர்கள் இது ஜனநாயக நாடு என இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்... கவர்னரின் வெளிநடப்பு என்பது அப்பட்டமான மரபு மீறல்... மத்திய அரசு எழுதி கொடுக்கும் உரையை தான் குடியரசு தலைவர் படிக்கிறார். குடியரசு தலைவர் அதை படிக்காமல், தான் நினைத்ததை படிப்பேன் என்றால் மத்திய அரசு ஒப்புக்கொள்ளுமா? பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னரை ஒரு கருவியாக பயன்படுத்தி வருவது ஜனநாயக விரோத செயல்" என்று காட்டமாக கூறியுள்ளார்.