சுப்புலட்சுமி அக்காவுக்கு சபாநாயகர் பதவி கொடுத்தால் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி?
சென்னை: சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை அடுத்த வாரம் நடைபெறும் நிலையில் திமுக, அதிமுகவில் இப்போதே எதிர்கால வியூகங்கள் விவாதப் பொருளாகி வருகின்றன. திமுக ஆட்சி அமைத்தால் சபாநாயகராக சுப்புலட்சுமி ஜெகதீசன் நியமிக்கப்படுவார் என்றும் அவர் வசம் உள்ள திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி கனிமொழி எம்.பி.க்கு கொடுக்கப்படும் என்கின்றனர் திமுக சீனியர்கள்.
திமுகவில் துரைமுருகனைப் போல சீனியர் தலைவர்களில் ஒருவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். 1977-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
1978-ல் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார். சுப்புலட்சுமி ஜெகதீசன் B.Sc. & B.T படிப்பை முடித்த ஆசிரியர். 1980-ல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். 1989-ல் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
கொரோனா பரவலை தடுக்க வேண்டுமென்றால்... மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
தடா சிறைவாசம்
1991-ல் ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக 1992-ம் ஆண்டு தடா சட்டத்தின் கீழ் 9 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். அவருக்கு தேர்தல் வரலாற்றில் முக்கியத்துவம் கொடுத்தது 1996-ம் ஆண்டு. அப்போதைய சட்டசபை தேர்தலில் மொடக்குறிச்சியில் மொத்தம் 1033 பேர் வேட்பாளர்கள். விவசாயிகள் பிரச்சனைக்காக சுயேட்சையாக போட்டியிட்டனர் இவர்கள். அதேநேரத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசனை தோற்கடிக்க திமுகவினரே உள்ளடியாகவும் பலரை களமிறக்கி இருந்தனர்.
சுப்புலட்சுமி அமோக வெற்றி
அந்த தேர்தலில் வாக்கு சீட்டே 120 பக்க புத்தகமாக அடிக்கப்பட்ட வரலாறு நிகழ்ந்தது. அந்த தேர்தலில் மொத்தம் 1.18 லட்சம் வாக்குகள் பதிவாகின. இத்தனை ஆயிரம் பேருக்கு மத்தியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் 64,436 வாக்குகளுடன் அமோக வெற்றியை பெற்றார். ஒரு ஓட்டு கூட வாங்காத வேட்பாளர்கள் எல்லாம் இருந்தது வரலாறு. அதனால்தான் இன்றளவும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக அசைக்க முடியாதவராக திமுகவினர் வார்த்தைகளில் சொல்வதானால் சுப்பு அக்கா இருக்கிறார்.
மத்திய இணை அமைச்சர்
2004-ம் ஆண்டு திருச்செங்கோடு லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவருக்கு மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் பதவி கிடைத்தது. இப்போது திமுக துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுக ஆட்சி அமைத்தால் சபாநாயகர் பதவியில் அமர வைக்கப்படுவார் என்பது தொடர்ந்து திமுக வட்டாரங்கள் தெரிவிக்கும் செய்தி. தமிழ்நாட்டின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமைக்குரிய பதவியில் சுப்பு அக்கா அமருகிறார் என்கிற தகவலுக்குப் பின்னால் திமுக தலைமை வேறு ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்கிறதாம்.
சபாநாயகராக சுப்புலட்சுமி ஜெகதீசன்
அதாவது சுப்பு அக்காவை சபாநாயகர் ஆக்கிவிட்டால் அவர் வசம் உள்ள கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை பெண் ஒருவருக்கு தர வேண்டும் என்ற அடிப்படையில் கனிமொழி எம்.பிக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் திமுக தலைமையின் திட்டமாம். ஏற்கனவே துணைப் பொதுச்செயலாளராக சற்குண பாண்டியன் மறைந்த போது அந்த பதவி கனிமொழிக்குதான் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மகளிர் அணி செயலாளர்தான் கனிமொழி வசமானது. தற்போது காலம் கனிந்து வந்திருக்கும் சூழ்நிலையில் கனிமொழி இயல்பாகவே திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு உரியவராகிவிடுவார் என்கின்றனர் திமுக சீனியர்கள்.
காத்திருக்கும் பதவி
முன்னதாக கனிமொழிக்கு தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி தரப்படலாம் என கூறப்பட்டது. ஸ்டாலினின் கொடைக்கானல் பயணத்துக்குப் பின்னர் சுப்பு அக்காதான் சபாநாயகர் என்பது திட்டவட்டமாகிவிட்டம். அதனால் கனிமொழிக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி காத்திருக்கிறதாம்..