தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனத்தின் புதிர் போட்டியில் தமிழ் புறக்கணிப்பு-கனிமொழி, உதயநிதி எதிர்ப்பு
சென்னை: தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனமான NCERT நடத்தும் புதிர் போட்டியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு திமுக லோக்சபா எம்.பி. கனிமொழி, அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மகாத்மா காந்தி அடிகளின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் NECRT புதிர் போட்டியை தமிழகத்திலும் நடத்துகிறது. ஆன்லைனில் இந்த புதிர் போட்டி நடத்தப்படுகிறது.

இப்போட்டியானது ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்ட மாணவர்களும் பங்கேற்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் சுற்றறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனம் தமிழகத்தில் நடத்திய புதிர் போட்டியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு திமுக லோக்சபா எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி எம்.பி. ட்விட்டரில், தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனம் நடத்தும் ஒரு புதிர் போட்டியில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழோ,ஆங்கிலமோ தெரியாமல் தாய்மொழி மட்டுமே அறிந்த குழந்தைகள் ஏராளமானோர் இருப்பதால்,இப்போட்டி அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதேபோல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications