டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட கனிமொழி வலியுறுத்தல்
சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று திமுக லோக்சபா எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளன. சென்னையை தவிர்த்து இதர மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்க உள்ளன.

ஆனால் டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழக அரசு திறக்கக் கூடாது என அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. தமிழக அரசின் முடிவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று தங்களது வீடுகள் முன்பாக போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில் டாஸ்மாக் திறப்பு எதிராக பதிவிட்டுள்ளதாவது:
மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதியை வாங்காமல் டாஸ்மாக் கடைகளை திறக்க நினைக்கும் தமிழக அரசு, வாழ்வாதாரமின்றி வாடும் மக்களிடம் இருந்து வருவாயைப் பெற்றுக் கொள்ள நினைக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், அரசின் இம்முடிவு நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும்.

மேலும், தற்போதைய சூழலில் டாஸ்மாக்கை திறப்பதால் குடும்ப வன்முறை அதிகரிக்கும் அபாயத்தையும் அரசு உணராமல் இருக்கிறது. எனவே, டாஸ்மாக்கை திறக்கும் முடிவை அரசு திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications