அரசுத் திட்டங்களில் இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பாங்க.. கனிமொழி சுளீர்
சென்னை: அரசுத் திட்டங்களில் இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பார்கள் என தூத்துக்குடி எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழை வளர்க்க மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என அண்மையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். அது போல் தமிழகத்தில் இந்தியை திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் மத்திய அரசாங்கம் தமிழை வளர்ப்பதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள்?

நிதி ஒதுக்கீடு
தற்போது கூட பட்ஜெட் முடிந்துவிட்டது. அதில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, சம்ஸ்கிருதம், ஹிந்தி தவிர மற்ற மொழிகளை வளர்ப்பதற்கு எந்த அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பதை தெளிவாக தெரிவிக்கட்டும்.

தெளிவாக
எந்த ஒரு திட்டத்திற்கும் ஆங்கிலத்தில் கூட பெயர் வைக்காத மத்திய அரசு, எல்லா திட்டங்களுக்கும் இந்தியில்தான் பெயர் வைக்கிறார்கள். இதிலிருந்து தமிழை எந்த அளவிற்கு வளர்ப்பார்கள் என தெளிவாக தெரிகிறது.

விவசாயம்
பெட்ரோலை உணவாக உண்ண முடியாது. அடிப்படையில் உணவு பாதுகாப்பு என்பது ஒரு நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. அதனால் தொழில் வளர்ச்சிக்காக இடம் ஒதுக்கப்படுகிறது. அதே போல் விவசாயத்திற்கும் தனி இடங்கள் ஒதுக்க வேண்டும்.

விளை நிலங்கள்
அவ்வாறு ஒதுக்கி அந்த இடங்களில் உணவு தரக் கூடிய நிலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது. எட்டு வழிச்சாலை விவகாரத்தில் என்ன பெயர் மாற்றினாலும் மக்களின் விளை நிலங்களை பறிக்கக் கூடிய எதையும் திமுக ஏற்காது என்றார்.












Click it and Unblock the Notifications