கைது செய்ததோடு வேலை முடிஞ்சது.. அமலாக்கத்துறையை பதம் பார்த்த கபில் சிபல்! ஆப்சென்ட் ஆன துஷார் மேத்தா
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஹேபியஸ் கார்ப்பஸ் வழக்கில், செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இன்று ஆஜராகி அமலாக்கத்துறைக்கு எதிராக பரபர வாதங்களை அடுக்கினார். ஆனால், அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆப்சென்ட் ஆனார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேஷ் இன்று ஆஜரானார்.
பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதன் காரணமாக வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஹேபியஸ் கார்ப்பஸ் வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் 3-வது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து இந்த வழக்கை கடந்த சில நாட்களுக்கு முன் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். அப்போது, எந்தெந்த கருத்துக்களில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளனர் என்பது குறித்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை 11 மற்றும் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார் மூன்றாவது நீதிபதி. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தங்கள் சார்பாக வாதாட உள்ளார் எனக் கூறியே மேகலா தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக் கோரிக்கை விடுத்திருந்தார். இதனால், கபில் சிபல் vs துஷார் மேத்தா வாதங்கள் பரபரக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி தொடர்ந்த வழக்கில் 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வீடியோ கான்பரஸ் வாயிலாக ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார்.
அதேசமயம், அமலாக்கத்துறை சார்பாக கடந்த விசாரணைகளின்போது ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இன்று ஆஜராகவில்லை. உத்தர பிரதேச அரசின் புல்டோசர் நடவடிக்கை தொடர்பான வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளார் துஷார் மேத்தா. உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவேவுக்கு பதிலடியாக வாதங்களை வைத்து வருகிறார் துஷார் மேத்தா.
அதன் காரணமாக ஐகோர்ட்டில் நடைபெறும் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையில் அவர் இன்று ஆஜராகவில்லை. நாளை மீண்டும் நடைபெற இருக்கும் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையின்போது, அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான கபில் சிபல், செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அதிகாரம் வழங்கியிருந்தாலும், புலன் விசாரணை அதிகாரம் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்குதான் உள்ளது எனவும் செந்தில் பாலாஜி பணம் பெற்றதாக எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் பரபரப்பான வாதத்தை முன்வைத்துள்ளார்.
மேலும், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. போலீஸ் அதிகாரிகள் போல, அமலாக்கத் துறையினர் செயல்பட முடியாது. சட்டப்படி சம்மன் அனுப்ப அவர்களுக்கு அதிகாரம் இல்லை. சட்டப் பிரிவு 17, 18- ன் படி அவர்கள் சோதனை செய்து பறிமுதல் செய்யதான் அதிகாரம் உள்ளது. கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் இல்லை என கபில் சிபல் வாதம் வைத்தார்.
தொடர்ந்து, சி.ஆர்.பி.சி சட்டத்தின் படி, அதிகாரத்தை எடுக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை. மற்ற குற்ற வழக்குகளை பொறுத்தவரை குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் புரிந்திருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் போலீசார் புலன் விசாரணை செய்து குற்றத்தை கண்டுபிடிப்பார்கள். ஆனால் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கை பொறுத்தவரை, விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் புரிந்திருக்கிறார் என முடிவுக்கு வரும் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் புகார் அளிக்கிறது.
அந்த வகையில் அமலாக்கத் துறையின் விசாரணை என்பது கைதுடன் முடிந்து விடுகிறது. அவர்கள் புலன் விசாரணை செய்ய முடியாது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் இல்லை. அதுபோல, அமலாக்கத்துறையினர், போலீசார் போல் செயல்பட முடியாது என கடுமையான வாதங்களை அமலாக்கத்துறைக்கு எதிராக அடுக்கினார் கபில் சிபல்.












Click it and Unblock the Notifications