காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்
Recommended Video
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்டத் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன் அக்கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்திய கராத்தே சங்கத்தின் தலைவராக இருப்பவர் கராத்தே தியாகராஜன். இவர் 1986-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரையும், மீண்டும் 1998-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரையும் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.
இதைத் தொடர்ந்து அக்கட்சியிலிருந்து 2001-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து அவர் அதிமுக சார்பில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் துணை மேயராக நியமிக்கப்பட்டார்.
காரணம்
இதைத் தொடர்ந்து 2001-ஆம் ஆண்டு மேயராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து கராத்தே துணை மேயர் பொறுப்பிலிருந்து 2002-இல் நீக்கப்பட்டார். பின்னர் மேம்பாலங்கள் கட்டுவது தொடர்பாக வழக்குகளை பதிய காரணமானார்.
6 மாதங்களுக்கு
இதையடுத்து அதிமுகவிலிருந்து 2005-இல் நீக்கப்பட்டார். பின்னர் ஒரு மோசடி வழக்கில் கைதாகிவிடுவோம் என்ற அச்சத்தில் 6 மாதங்களுக்கு தலைமறைவாகவே இருந்தார். இதைத் தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னால் வெளியே வந்த தியாகராஜன் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான இவர் காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தனித்து போட்டி
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன் , உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்றார்.
பல்லக்கு தூக்குவது
இது கூட்டணி கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன் தண்ணீர் பிரச்சினைகளுக்கு அதிமுக அரசு தீர்வு காணவில்லை என கூறி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே என் நேரு பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும். எத்தனை காலத்துக்குதான் காங்கிரஸுக்கு பல்லக்கு தூக்குவது என கேள்வி எழுப்பியிருந்தார்.
கே என் நேரு
கராத்தே தியாகராஜனின் கருத்துக்கு கேஎன் நேருவின் கருத்து பதிலடியாக பார்க்கப்பட்ட நிலையில் இது குறித்து கராத்தே தியாகராஜன் கூறுகையில் திருச்சியில் எம்பியாக வெற்றி பெற்ற திருநாவுக்கரசர் தான் பெற்ற வெற்றிக்கு காரணம் தனது செல்வாக்குதான் என கூறியதால்தான் கே என் நேரு அவ்வாறு பேசுகிறார் என்றார். திருநாவுக்கரசர் குறித்து கராத்தே குறை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திருநாவுக்கரசரும் விளக்கமளித்தார்.
நடவடிக்கை
இந்நிலையில் தென்சென்னை மாவட்டத் தலைவராக உள்ள கராத்தே தியாகராஜன் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கட்சிக்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் ஒழுங்கீனம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். மேலும் கராத்தே தியாகராஜன் ரஜினிக்கு நெருக்கமானவர் என்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.