கர்நாடக காங்கிரஸ் "போர்வாள்" டி.கே.சிவகுமாருக்கு சிக்கல்? திடீரென தம்பி வேட்புமனு தாக்கல்! ட்விஸ்ட்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் டிகே சிவக்குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தான் அவரது தம்பியான காங்கிரஸ் எம்பி டிகே சுரேசும் திடீரென்று இன்று வேட்புமனுத்தாக்கல் செய்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தான் டிகே சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னணியில் உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை தோற்கடிக்கும் நோக்கத்தில் பாஜக சார்பில் பலமான வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். அதன்படி டிகே சிவக்குமாரை எதிர்த்து பாஜக சார்பில் தற்போதைய வருவாய்த்துறை அமைச்சர் ஆர் அசோக் களமிறக்கப்பட்டுள்ளார். இதுதவிர அசோக் பெங்களூர் பத்மநாபநகர் சட்டசபை தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

இதையடுத்து டிகே சிவக்குமார் மற்றும் ஆர் அசோக் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். டிகே சிவக்குமாரை தோற்கடிக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இதற்கிடையே தான் ஆர் அசோக்கை எதிர்த்து பெங்களூர் பத்மநாபநகர் தொகுதியில் டிகே சிவக்குமாரின் தம்பியான காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் களமிறக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. மேலும் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் டிகே சுரேஷ் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என்ற செய்திகளும் வெளியாகின.
இந்நிலையில் தான் டிகே சுரேஷ் இன்று கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் ஏற்கனவே அவரது அண்ணனும், மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமார் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது எதற்காக டிகே சிவக்குமார், டிகே சுரேஷ் ஆகியோர் ஒரே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது டிகே சிவக்குமார் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்பட பல்வேறு விசாரணை அமைப்புகளிடம் 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் சில வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. இதனால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது நடந்தால் அங்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் இல்லாத நிலை ஏற்படும். இதனால் தான் முன்னெச்சரிக்கையாக டிகே சுரேஷ் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications