தலைவர் பதவிக்காக மிக மிக கடும் முயற்சியில் கார்த்தி சிதம்பரம்! மவுனம் கலைக்காத டெல்லி மேலிடம்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை கைப்பற்றியே தீர வேண்டும் என்பதில் முன்பைக் காட்டிலும் இப்போது மூர்க்கம் காட்டுகிறார் கார்த்தி சிதம்பரம் எம்.பி.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள அவர், இது தொடர்பாக பிரியங்கா காந்தியையே நேரடியாக சந்தித்து பேசியிருக்கிறார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக தன்னை நியமிக்கும்பட்சத்தில், எம்.பி.சீட்டை கூட அவர் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆக வேண்டும் என்பது தனது ஆசை என ஒளிவுமறைவின்றி பல பேட்டிகளில் மிகவும் வெளிப்படையாக கூறி வந்தவர் கார்த்தி சிதம்பரம்.

ராகுல் காந்தியுடன் கூட இப்போது இணக்கமாக செல்லத் தொடங்கியுள்ள கார்த்தி சிதம்பரம், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்காக மிக மிக கடும் முயற்சிகளை சலிக்காமல் முன்னெடுத்து வருகிறார். ஆனாலும் காங்கிரஸ் தேசியத் தலைமை இன்னும் இந்த விாகாரத்தில் மவுனம் கலைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகது. ப.சிதம்பரமும் தனது மகனுக்காக கட்சி தலைமையிடம் பேசி வருவதாக தெரிகிறது.
சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை காட்டிலும் கட்சியின் மாநிலத் தலைவர் பதவி அதிகாரமிக்கது எனக் கருதுகிறார் கார்த்தி சிதம்பரம். அதுமட்டுமல்ல தமிழக அரசியல் வரலாற்றிலும் தலைவர் பதவி தன்னை இடம்பெற வைக்கும் எனக் கணக்குப் போடுகிறார். இதனால் தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்காக கட்சி மேலிடத்திடம் இந்தளவுக்கு மன்றாடி வருகிறார். கார்த்தி சிதம்பரத்தை பொறுத்தவரை சற்று தடாலடியாக பேசக் கூடியவர் என்பதே அவருக்கான மைனஸ் பாயிண்டாக பார்க்கிறது காங்கிரஸ் தேசிய தலைமை.
ஏனெனில் மாநிலத் தலைவராக இருப்பவருக்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும் அவசியம். அதேபோல் கூட்டணிக் கட்சிகளை தந்திரமாக அணுசரித்து போக வேண்டிய போக்கும் அவசியம். இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரை மாற்றக்கோரி அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கார்கேவுக்கு கடிதம் மேல் கடிதங்கள் அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications