"எப்படியாவது போட்டோவை வாங்கித்தா என கெஞ்சினார் சீமான்” விடுதலைப் புலிகளின் தோழர் கரு.அண்ணாமலை பேட்டி
சென்னை: பிரபாகரனுடன் சீமான் உள்ள போட்டோ போலியானது என விடுதலைப் புலிகளின் தோழர் கரு.அண்ணாமலை தெரிவித்துள்ளார். சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள கரு.அண்ணாமலை, சீமான் வெளியிட்டது கிராபிக்ஸ் போட்டோ தான் எனத் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலியானது என்றும் அதனை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என்றும் திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பிரபாகரனின் அண்ணன் மகன், எல்லாளன் திரைப்பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் உள்ளிட்ட பலர் சீமான், பிரபாகரன் உடன் நடந்த சந்திப்பை பூதாகரமாக்கியதாக தெரிவித்து வருகின்றார்.
இந்நிலையில், விடுதலைப் புலிகள் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கரு.அண்ணாமலை, சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், சீமான் பற்றிய பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ள கரு. அண்ணாமலை, சீமான் உடன் பிரபாகரன் இருக்கும் புகைப்படம் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
கரு. அண்ணாமலை பேசுகையில், "சீமான் ஈழத்துக்கு போனது உண்மை. பல நாள் காத்திருந்து பிரபாகரனை பார்க்க முயன்றார். அனுமதி மறுக்கப்பட்டதால் கொளத்தூர் மணி மூலமாக அவரை சந்தித்தார். அவருடன் புகைப்படம் எடுத்ததும் உண்மை. ஆனால், அது இந்தப் புகைப்படம் இல்லை. இது கிராபிக்ஸ்.
தமிழ்நாட்டில் இருந்து பிரபாகரனை சந்திக்கச் சென்ற தலைவர்கள் பலர் படகில் சென்றார்கள். ஆனால் சீமான் அப்படி படகில் போகவில்லை. 2 முறை கோடியக்கரையில் இருந்து படகில் இலங்கைக்கு பயண ஏற்பாடு செய்த நிலையில், வாந்தி வந்ததால் செல்லவில்லை. பின்னர் பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து சென்றார்.
மற்றவர்களை அழைத்தது விடுதலை புலிகள். ஆனால், சீமானை அழைத்தது விடுதலை புலிகளின் கிளையான கலை பண்பாட்டுத்துறை. அதன் பொறுப்பாளர் சேரலாதன். அவர் அழைத்துத்தான் சென்றார். அதற்கு முழு ஏற்பாடுகளையும் செய்தவர் வன்னி அரசு. அங்கு சென்றும் பிரபாகரனை பார்க்க முடியாத நிலையில், கொளத்தூர் மணியை தொடர்பு கொண்டு பேசி அதன் மூலம் சந்திக்க வாய்ப்பு பெற்றார். சந்திப்பு நடந்தது ஒருசில நிமிடங்கள் தான்.
அப்போது போட்டோ எடுத்துக்கொண்டார். அந்த போட்டோ கிடைக்குமா அதை வாங்கிக்கொடு என்று சில மாதங்களுக்குப் பிறகு என்னிடம் கேட்டார். ஈழப்போர் முடிவை நெருங்கி விட்டது.. போராளிகள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயன்று வருகின்றனர். இனி போட்டோ கிடைக்க வாய்ப்பில்லை என்றேன். கிராபிக்ஸ் செய்வதை தவிர வேறு வழியில்லை என சீமானிடம் சொன்னேன். சொன்ன 4வது நாளில் கிராபிக்ஸ் செய்து போலி போட்டோவை வெளியிட்டார் சீமான்.
இயக்குநர் களஞ்சியத்திடம் 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த புகைப்படம் போலி எனச் சொன்னேன். இது கிராபிக்ஸ் செய்யப்பட்ட ஃபோர்ஜரி போட்டோ என்பது களஞ்சியத்துக்கு தெரியும். இப்போது 3 நாட்களுக்கு முன்பும் குறுஞ்செய்தியில் களஞ்சியத்திடம் சொன்னேன். அதற்கு பதில் இல்லை. பணம் ஒன்றுதான் சீமானுக்கு ஒரே குறிக்கோள். சங்ககிரி ராஜ்குமார் சொன்னது உண்மைதான்" என கரு.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications