கருணாநிதி உலகம்.. மார்ச் 6 முதல் பொதுமக்கள் பார்வையிட தமிழக அரசு அனுமதி.. கட்டணம் ஏதுமில்லை
சென்னை: கருணாநிதி நினைவிடத்தில் உள்ள கலைஞர் உலகம் எண்ணும் அருங்காட்சியகத்தை மார்ச் 6 முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இணைய தளத்தில் முன்பதிவு செய்து பொதுமக்கள் அருங்காட்சியகத்தை பார்வையிடலாம் என்றும் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் மற்றும் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த வாரம் திறந்து வைத்தார். கருணாநிதி நினைவிடம் அருகே 20 ஆயிரம் சதுரடியில் அமைக்கப்பட்டுள்ள 'கலைஞர் உலகம்' என்ற டிஜிட்டல் அருங்காட்சியகத்துக்கான சுரங்கப்பாதை அனைவரையும் கவரும் விதமாக உள்ளது.

முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் 'கலைஞர் எழிலோவியங்கள்' என்ற பெயரில் அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் கருணாநிதியின் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 'கலைஞருடன் ஒரு செல்பி' என்ற பெயரில் ஒரு அரங்கு அமைந்துள்ளது.
இங்கு கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அமர்ந்திருக்கும் தோற்றம் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். 15 அடி ஆழத்தில் அருங்காட்சியகம்: புகைப்படத்தை எடுத்தவுடன் 'டிஜிட்டல்' தொடு திரையில் செல்போன் எண்ணை பதிவு செய்தால் அந்த புகைப்படம் சட்டென்று 'வாட்ஸ்-அப்' எண்ணுக்கு வந்து விடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நினைவிடம் அருகே 15 அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட ஒருவாரத்திற்கு பிறகு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கபட உள்ளது. அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம் கிடையாது. திரை உலக பிரபலங்கள் பலரும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் மார்ச் 6 முதல் கருணாநிதி அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு மார்ச் 6 முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிட www.kalaignarulagam.org என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம் இலவசமாக பார்வையிடலாம். கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிச்சீட்டு தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications