கருப்பு வெள்ளை கட்டங்கள்.. செஸ் போர்டு அலங்காரத்தில் கருணாநிதி நினைவிடம்!
சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் நினைவிடம் செஸ் போர்டு தீமில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரியில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று மாலை தொடங்குகிறது. இந்த விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களாகவே செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விழா நடைபெறும் இடங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
அது போல் பால் பாக்கெட்டுகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தம்பி மஸ்கட் லோகோ உருவபொம்மைகள் செல்பி பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தமிழகம் முழுவதும் வைக்கப்படுகின்றன.

வேட்டி சட்டை
வேட்டி, சட்டை அணிந்தபடி குதிரையின் முகத்தோற்றத்தில் இந்த தம்பி பொம்மை காணப்படுகிறது. அது போல் பெரும்பாலான பள்ளிகளில் செஸ் போர்டு வரையப்பட்டு அதில் மாணவர்கள் காயின்களை போல் நிற்க வைக்கப்பட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

3000 ஆண்டுகள்
இந்த விளையாட்டு இந்தியாவில் தோன்றி வெளிநாடுகளில் பிரபலமடைந்ததாக சொல்லப்பட்டாலும் தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த விளையாட்டை சதுரங்கம் என்ற பெயரில் விளையாடியதற்கான சான்றுகள் உள்ளன. இதனால் இந்த விளையாட்டு குறித்தும் போட்டி குறித்தும் மக்களிடையே பெரும் ஆர்வம் எழுந்துள்ளது.

நாடக கலைஞர்கள்
அது போல் நாடக கலைஞர்கள் செஸ் போர்டு வரைந்து அதில் அவர்கள் காயின்களை போல் நின்று அந்தந்த செஸ் காயின்களுக்கு என்ன விதிகள் இருக்கிறதோ அதன் படி முக பாவனைகளுடன் கலைஞர்கள் நடித்து காட்டியது அற்புதமாக இருந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு நேப்பியர் பாலம் செஸ் போர்டு கட்டங்கள் போல் கருப்பு, வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தன.

செஸ் போர்டு அலங்காரம்
செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் சதுரங்க பலகை போல் அலங்காரம் செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சமாதியில் அலங்காரம்
கருணாநிதியின் சமாதியில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணியின் ஸ்லோகனான நாற்பதும் நமதே என்பதற்கேற்ப 40/40 என அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அது போல் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு முடிந்த போதும் முதல்வராய் ஓராண்டு முதன்மையாய் நூறாண்டு காப்போம் என பூக்களால் எழுதப்பட்டு தமிழக அரசு தலைமைச் செயலகம் வடிவமும் அமைக்கப்பட்டது.

கோயில் அலங்காரம்
அது போல் இந்து சமய மானிய கோரிக்கையின் போது கருணாநிதியின் சமாதியில் கோயில் போல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திமுக சிறுபான்மையினருக்கான கட்சி என்றும் இந்துக்களுக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சியினரால் பிரச்சாரம் செய்யப்பட்ட நிலையில் தாங்கள் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் கருணாநிதியின் சமாதியில் கோயில் போல் அமைக்கப்பட்டிருந்தது பேசும் பொருளானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications