சட்டசபையில் கருணாநிதி படத்திறப்பு... புன்னகை பொழியும் பொன்னோவியம் என வைரமுத்து புகழாரம்
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதி உருவ படத்தை திறந்து வைக்கிறார். இந்த படத்திறப்பு விழாவிற்கு புகழ்ச்சி கவிதை எழுதியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
சென்னை: தமிழக சட்டசபையின் நுாற்றாண்டு விழாவும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படம் திறப்பு விழாவும் இன்று மாலை நடைபெறவுள்ளது. சட்டசபையில் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். கருணாநிதியின் படம் சட்டசபையில் திறக்கப்படுவதை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் குடியரசுத்தலைவருக்கும், முதல்வருக்கும் நன்றி கூறியுள்ளார்.
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதி, 1969ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றார். 1971, 1989, 1996, மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்த அவர் வயது முதிர்வு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் நாள், தனது 94ஆவது வயதில் காலமானார்.

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் திறப்பு விழா இன்று மாலை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த படத்திறப்பு விழாவை பாராட்டி கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முத்தமிழறிஞரே! எந்த இடம் உங்கள் பொதுவாழ்வில் புகழ் பூத்த இடமோ, எந்த இடம் இனத்திற்கும் மொழிக்கும் புகழ் சேர்த்த இடமோ, அந்த இடத்தில் உங்கள் புன்னகை பொழியும் பொன்னோவியம் என்று குறிப்பிட்டுள்ளார். உங்கள் திருவுருவம் திறந்துவைக்கும் குடியரசுத் தலைவருக்கும் திறக்கச் செய்யும் முதலமைச்சருக்கும் நன்றி என்றும் பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.












Click it and Unblock the Notifications