கலைக்கும் கலைஞருக்கும் மரணமில்லை! அரசியலில் அவர் தொடாத உயரம் இல்லை..முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
சென்னை: கலைஞர் 100 விழா சென்னை கிண்டியில் நடைபெற்றது. இந்த நிலையில், கலைக்கும் கலைஞருக்கும் மரணமில்லை என்றும், அரசியலில் அவர் தொடாத உயரம் இல்லை எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் திமுக சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ் திரையுலகம் சார்பில் கலைஞர் 100 என்ற பெயரில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, கலைஞர் 100 எனும் மிக பிரம்மாண்டமான விழாவாக சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், மழை வெள்ள பாதிப்பு காரணமாக இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது. சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்றார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர் முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- அரசியலில் அவர் தொடாத உயரங்கள் இல்லை! பிரதமர்களை, குடியரசுத் தலைவர்களைத் தீர்மானிக்கும் உயரத்தை அடைந்தவர் அவர்.
எனினும் அவரது இயற்பெயரையும் மீறிய முதற்பெயராக இன்றளவும் நிலைத்து நிற்பது #கலைஞர் எனும் அடைமொழிதான்! 'தலைவர்' என்பதையும் தாண்டிய அடையாளமாக அவர் கருதியதும் 'கலைஞர்' என்பதைத்தான். கலையுலகுக்கும் முத்தமிழறிஞர் கலைஞருக்கும் இருந்த உறவுக்கு அப்பெயரே சிறந்த சான்று.
"Art should comfort the disturbed and disturb the comfortable" என்ற வரிக்கேற்பத் தம் படைப்புகளில் எல்லாம் அரசியலை நுழைத்து, சமூக இழிவுகளைச் சாடிய அசலான கலைஞருக்கு அவரது தாய்வீடாம் தென்னகத் திரையுலகத்தின் சொந்தங்கள் எல்லாம் கூடி எடுத்த #கலைஞர்100 மாபெரும் கலைவிழா கண்டு - அக்காவியத் தலைவனின் கொள்கை வாரிசாக, அவர் பண்படுத்திய தமிழ் மண்ணின் முதலமைச்சராக அகமகிழ்கிறேன்.
அவரது மகனாக நன்றி நவில்கிறேன். 65 ஆண்டு காலம் அவர் பயணித்த துறையில் இருந்து திரண்டு வந்து அவர் நினைவைப் போற்றிய திரையுலக உடன்பிறப்புகள் அனைவருக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நன்றி! நன்றி! கலைக்கும் கலைஞருக்கும் மரணமில்லை!.. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் ட்விட் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications