விஜய் கரூர் பிரச்சார வீடியோக்களை கொடுங்க.. சிடிஆர் நிர்மல்குமாருக்கு போலீசார் நோட்டீஸ்!
சென்னை: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சார வீடியோக்களை அளிக்குமாறு தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு கரூர் காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. விஜய்யின் பிரச்சார வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் உள்ளிட்டவற்றை அளிக்குமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் கடந்த 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மிகக் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு மொத்தம் 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு ரூ. 10 லட்சமும், மத்திய அரசு ரூ. 2 லட்சமும், தவெக தரப்பில் இருந்து ரூ. 20 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.

கரூர் கோரச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதில் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் வரும் 14ஆம் தேதி சிறையில் அடைக்க கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரூர் துயரச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. அதன்படி அந்த ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தங்களை கைது செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், விஜய் கரூர் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமாருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கேட்டு கரூர் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
விஜய் தனி கேமராமேன் எடுத்த காட்சிகள், விஜய்யின் பிரச்சார பேருந்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளையும் கரூர் போலீசார் கேட்டுள்ளனர். சென்னை சேலையூரில் உள்ள இல்லத்திற்கு சென்ற போலீசார், சிடிஆர் நிர்மல்குமாரின் உதவியாளரிடம் நோட்டீஸை வழங்கிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications