வசமாக சிக்கிய புஸ்ஸி ஆனந்த்.. அமைக்கப்பட்ட 3 தனிப்படை.. இன்றே கைதாக வாய்ப்பு?
சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் தலைமறைவாகி உள்ளதோடு முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடத்திய மதுரை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. இதனால் இருவருக்கும் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு, 3 தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்ய உள்ளனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தவெக தலைவரும், நடிகருமான விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் தலைமறைவாகி உள்ளனர். இவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே தான் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களின் மீது விசாரணை நடத்திய மதுரை உயர்நீதிமன்றம் இருவருக்கும் முன்ஜாமீன் கொடுக்க மறுத்து விட்டது. அதோடு இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வழக்கு தொடக்க நிலையில் உள்ளது. இதனால் முன்ஜாமீன் கொடுக்க கூடாது என்று தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தை ஏற்று மதுரை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு என்பது புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் அவர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்ய அதிக வாய்ப்பை உருவாக்கி உள்ளது. ஏற்கனவே 3 தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். இருவர் குறித்த முக்கிய விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். இதனால் முன்ஜாமீன் பெற்று கைது நடவடிக்கையில் தப்பிக்க இருவரும் முயன்றனர். இது கைக்கூடவில்லை. மேலும் உடனடியாக மேல்முறையீடும் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.
தற்போது நீதிமன்றங்களுக்கு தசரா விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று கூட தவெக மற்றும் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்குகள் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் விசாரணைக்கு வந்தாலும் கூட அதனை வழக்கமான அமர்வு விசாரிக்கவில்லை. தசரா விடுமுறை சிறப்பு அமர்வு தான் விசாரித்தது. இந்த அமர்வு நாளை மற்றும் நாளை மறுநாள் செயல்படாது. நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. இதனால் நீதிமன்றங்கள் விடுமுறையில் இருக்கும்.
எனவே புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரால் மேல்முறையீடு செய்ய முடியாது. மாறாக வரும் திங்கட்கிழமை தான் நீதிமன்றத்தில் அவர்களால் மேல்முறையீடு செய்ய முடியும். அதன்பிறகு செவ்வாய் அல்லது புதன் கிழமை வழக்கு பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரும். இதற்கு இடையில் 3 அல்லது 4 நாட்கள் வரை காலஅவகாசம் உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி தமிழக தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்து நீதிபதியின் வீட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் மதுரை உயர்நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு என்பது தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications