கரூர் கொடுந்துயரம்.. புஸ்சி ஆனந்த் சிக்குவாரா? தேடுதல் வேட்டை தீவிரம்.. 3 தனிப்படைகள் அமைப்பு
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலார் புஸ்சி ஆனந்த், இணை செயலார் சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் புஸ்சி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. புஸ்சி ஆனந்த் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந் தேதி மக்கள் சந்திப்பை நடத்தினார். கடந்த சனிக்கிழமை (27ஆம் தேதி) கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சார கூட்டத்தில் விஜயை பார்ப்பதற்காக பல ஆயிரம் பேர் திரண்டனர்.

விஜய் காலதாமதமாக வருகை தந்ததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். நாட்டையே இந்த சம்பவம் உலுக்கியுள்ளது. இந்த கொடுந்துயர் சம்பவம் காரணமாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மதியழகன் மற்றும் கரூர் மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜ் நேற்று முன் தினம் இரவு கைதாகினர். அவர்களை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.
இதற்கிடையே, த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, புஸ்சி ஆனந்தை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு புஸ்சி ஆனந்த் மற்றும் சி.டி. நிர்மல் குமார் ஆகியோரை தீவிரமாக போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications