கரூர் கூட்ட நெரிசல்.. ஸ்டாலினுக்கு போன் போட்ட ராகுல் காந்தி.. விஜய்யிடமும் பேச்சு?
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலினை தொடர்புகொண்டு விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் விஜய்யுடனும் ராகுல் காந்தி செல்போனில் தொடர்புகொண்டு பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தவெக தலைவர் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 2 மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வந்தார். நேற்று அவர் நாமக்கல், கரூர் மாவட்டங்களில், மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கரூர் வேலுசாமிபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உள்பட 40 பேர் பலியாகினர்.

குழந்தைகள், பெண்கள்
110 பேர் காயம் அடைந்தனர். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில், விஜய் நேற்று பிற்பகல் 3 மணிக்கு பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டது. பின்னர் கட்சி சார்பில் மதியம், 12 மணிக்கு அவர் பிரசாரத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கட்சி தொண்டர்கள் காலை, 10 மணி முதலே அங்கு குவிய தொடங்கினர். இதில், குழந்தைகள், பெண்கள் அதிகம் பேர் திரண்டனர்.
அந்த பகுதியில், 10 ஆயிரம் பேர் மட்டுமே கூட முடியும். ஆனால் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு கூடி இருந்தனர். ஆனால், நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்த விஜய், கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு வர நீண்ட நேரமானது. இதனால், விஜய்யை பார்க்க ஆவலுடன் காத்திருந்த தொண்டர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் தண்ணீர், உணவு சாப்பிடாமல் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர்.
40 பேர் உயிரிழப்பு
இரவு 7 மணிக்கு பிரசார இடத்திற்கு, விஜய் வந்தடைந்தார். விஜய் வந்ததும் அவரை பார்க்க காட்டியதாலும் கடுமையான கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இதனால், ஒருவர் மீது ஒருவர் முண்டியடித்துக்கொண்டு ஒடியதாலும் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் 40 பேர் உயிரிழதனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்தச் சம்பவத்துக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து இருந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர். கரூர் சம்பவம் தொடர்பாக தேசிய தலைவர்களும் அதிர்ச்சி தெரிவித்தனர்.
ஸ்டாலினிடம் பேசிய ராகுல் காந்தி
இந்த நிலையில், காங்கிரஸ் எம்பியும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, இன்று முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:-
"கரூரில் நடந்துள்ள துயரச் சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் விசாரித்து, சிகிச்சை பெற்றும் வருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்தார்"என்று பதிவிட்டு இருந்தார்.
விஜய்யுடன் ராகுல் காந்தி பேச்சு
இதற்கிடையே, ராகுல் காந்தி, தவெக தலைவர் விஜய்யுடனும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யிடம் தொலைபேசி வாயிலாக பேசிய ராகுல் காந்தி சம்பவம் குறித்து கேட்டறிந்ததாக சொல்லப்படுகிறது. எனினும், இந்த பேச்சு தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications