சிறுமியை காணோம்னு! விஜய் மைக்கில் அறிவிச்சாரே! அது என் குழந்தைதான்! அருணா ஜெகதீசனிடம் தந்தை கண்ணீர்!
சென்னை: "தவெக பிரச்சார கூட்டத்தில் 14 வயது சிறுமியை காணவில்லை என விஜய் அறிவித்தது என் மகளைத்தான் மேடம்" என கரூர் ஏமூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் துக்கம் தொண்டையில் அடைக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனிடம் தெரிவித்தார்.
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் திருச்சிக்கு விமானம் மூலம் சென்ற அருணா ஜெகதீசன், அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் சென்றடைந்தார். அவர் அங்கு சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார். விஜய் பேசிய இடத்தையும் ஆய்வு செய்தார்.
பொதுமக்கள்
மேலும் அங்கிருந்த பொதுமக்களிடமும் என்ன நடந்தது என விசாரணை நடத்தினார். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து, கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடமும் அவர் விசாரித்தார். இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.
இறந்தவர்களின் உறவினர்கள்
அதில் இறந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். அந்த வகையில் கரூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள ஏமூர் புதூருக்கு அருணா ஜெகதீசன் சென்றார். அந்த ஊரை சேர்ந்த 5 பேர் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் அவர் தனது மனைவி, மகளை இழந்த சக்திவேலின் வீட்டிற்கு சென்றார்.
ஏமூரில் 5 பேர் பலி
அங்கு சக்திவேலிடமும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினார். அப்போது சக்திவேல் கூறுகையில், தவெக பொதுக் கூட்டத்திற்கு எங்கள் ஊரில் இருந்து டெம்போ வைத்து தவெக நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர். அதில் என் மகளும் மனைவியும் சென்றனர்.
அதிகரித்த கூட்டம்
விஜய் வந்ததும் கூட்டம் அதிகரித்த போது என் மகளை காணவில்லை என்றதும் என் மனைவி தேடினார். அப்போது விஜய் கூட்டத்தில் ஏதோ சலசலப்பு எழுவதை கண்டு "என்ன ஆச்சு" என கேட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் குழந்தையை காணவில்லை என்றனராம். உடனே விஜய் குழந்தையின் பெயர் என்ன என கேட்டு அதை மைக்கில் அறிவித்தாராம்.
விஜய் அறிவித்த பெயர் தரணிகா
முதலில் தவறான உச்சரிப்பை அவர் கொடுத்தாலும் பிறகு என் மனைவி, குழந்தையின் பெயர் தரணிகா என சொல்லியதும் அவரும் தரணிகா எங்கே இருக்கிறீர்கள், குழந்தை எங்கே இருக்கிறது என தேடுங்கள் என்றாராம். என் குழந்தை காணாதது என் மனைவிக்கு தெரிந்து அவர்தான் குழந்தையின் பெயரை தெரிவித்தார். மற்றவர்களுக்கு குழந்தையின் பெயர் தெரியாது.
உயிரை காப்பாற்றிக் கொள்ள
கூட்டத்தில் குழந்தை விழுந்திருக்கிறது. அவரை தேடிய என் மனைவியும் விழுந்திருக்கிறார். எல்லாரும் அங்கிருந்து அவர்களது உயிரை காப்பாற்ற நினைத்து இவர்களை மிதித்துவிட்டனர் என கண்ணீர் மல்க தெரிவித்தார். அப்போது அருணா ஜெகதீசன், "இவ்வளவு தூரத்தில் இருந்து கரூருக்கு ஏன் சென்றார்கள்? கரூர் என்றால் கூட அருகே இருப்பதால் சென்றிருக்கலாம், ஆனால் 10 கி.மீ. தூரத்தில் இருந்து எப்படி போனார்கள் என கேட்டதற்குத்தான் தவெக நிர்வாகிகள் டெம்போ வைத்து அழைத்துச் சென்றதையும் அங்கிருந்தவர்கள் கூறினர்.
அருணா ஜெகதீசன்
மேலும் அருணா ஜெகதீசன் கூறுகையில், "விஜய் அறிவித்ததும் அந்த குழந்தை உயிருடன் இருந்திருந்தால் நான் இங்கே இருக்கிறேன் என சொல்லியிருப்பாளே, விவரம் தெரிந்த குழந்தைதானே" என்றார்.
டெம்போ
மேலும் அவர் கூறுகையில், தவெக நிர்வாகிகள் அழைத்துச் சென்றால் அவர்கள் பத்திரமாக அழைத்து வந்திருக்கணுமா இல்லையா, டெம்போவில் எத்தனை பேர் போனார்கள், எத்தனை பேர் பத்திரமாக திரும்பினார்கள்? உங்கள் மகளுக்கு விஜய் என்றால் பிடிக்குமா என்றார்.
சக்திவேலுக்கு சோதனை
அதற்கு சக்திவேல், என் மகளுக்கு விஜய் என்றால் மிகவும் பிடிக்கும். என் மகளுக்கும் மனைவிக்கும் நேர்ந்தது யாருக்கு நேர கூடாது! என கண்ணீர் விட்டு கதறினார். சக்திவேல் டாஸ்மாக் சூப்பர்வைசராக இருக்கிறார். அவரது மனைவி பிரியதர்ஷினி எம்ஏ, பிஎட் பட்டதாரி. இவர்களுக்கு தாரணிகா, நிதிகா என்ற இரு மகள்கள்.
3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மகள் மரணம்
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 9 வயதான நிதிகா உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் 14 வயதான மகள் தாரணிகா அருகில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். தீவிர விஜய் ரசிகரான அவர் விஜய்யை பார்த்தே ஆகணும் என்ற ஆர்வத்தில் தாயுடன் சென்ற நிலையில் தற்போது கூட்ட நெரிசலில் சிக்கி தாயும் மகளும் இறந்து தந்தை கண்ணீருடன் நிர்கதியாய் நிற்கிறார்.












Click it and Unblock the Notifications