கொரோனா சவால்: காசிமேடு.. கோயம்பேடு ஆகாமல் காக்க சில டிப்ஸ்!
சென்னை: ஊரில் இருக்கின்ற காய்கறி மார்க்கெட் களையெல்லாம் வேறு இடத்திற்கு மாற்றியபோது சென்னையில் மட்டும் மாற்றாது அது ஏன் என்று யோசித்து இல்லை அதற்கு என்று வேறு ஏதாவது தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டிருப்பார்கள் என்று நம்பிய சாமானியன் நான்.
அதுமட்டுமல்ல பின்னாளில் கோயம்பேடு கொரோனா மையமாக மாறியபோது நொந்து வெந்து போனவர்களில் முதன்மையானவனும் கூட. இன்று காசிமேட்டைப் பற்றிய ஒவ்வொரு செய்தியையும் பார்க்கும்போதும், கூட்டம் கூட்டமாய் மக்கள் குழுமி இருப்பதைப் படிக்கும்போதும் திரும்பத் திரும்ப அதே விதமான எண்ணங்கள்.
ஒரு கோயம்பேட்டில் இருந்து நாம் கற்றுக் கொள்ளவில்லை. காசிமேடு இன்னொரு கோயம்பேடு ஆவதற்கு முன்னாலே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது என் போன்ற பலரின் ஆதங்கம்.
சரி என்ன விதமான நடவடிக்கை?
மொத்த வியாபாரிகளை மட்டும் அனுமதித்துவிட்டு பொதுமக்களுக்கு காசிமேட்டில் அனுமதி இல்லை என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
சில்லறை வணிகம் நடமாடும் மீன் கடைகள் அல்லது ஆன்லைன் மூலமாக மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
சென்னையில் இந்த நடமாடும் வண்டிகள் பல பேரிடம் உண்டு. அவர்கள் மட்டுமே மொத்த வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்து அரசு அனுமதித்த ஒரு இடத்தில் ஒவ்வொரு ஏரியாவிலும் விற்பனை செய்யவேண்டும்.
அல்லது சொமேட்டோ ஸ்விக்கி போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு ஆவன செய்ய வேண்டும்.
பொதுமக்கள் பார்வையில் இருந்து மிக சாதாரணமாக இதைச் சொல்லிவிட முடியும். ஆனால் இதற்குரிய அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுப்பது சிறிது சிரமமிக்க காரியமாக இருக்குமேயொழிய அவ்வளவு கடினமானதாக இருக்கப்போவதில்லை. இதனால் எந்த இடத்திலும் வியாபாரம் பாதிக்கப் போவதில்லை.
இந்த கொரோனா காலகட்டம் வாழ்வில் அவர்களுக்கு ஒரு புதுமையான முறையில் வியாபாரத்தை செய்ய சொல்லிக் கொடுத்ததாக ஏற்றுக்கொண்டு வியாபாரிகள் இதைச் செய்ய முன்வரவேண்டும் மற்றும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வீட்டில் குழந்தைகளையும் பெரியவர்களையும் கவனித்துக்கொண்டு இந்த கொரோனாவை எதிர்கொள்ளும் சாமானியனின் கோரிக்கை இது.
அதிகரிக்கும் கொரோனா.. வாடகை கொடுக்க முடியாத நிலை.. சென்னையிலிருந்து வெளியேறும் மக்கள்
நாவைக் கட்டுப்படுத்த முடியாததால் தான் கொரோனா வின் நாவுக்கு இரையாகிப் போனார்கள் என்று நாளைய தலைமுறை நம்மைப் பற்றிய வரலாற்றைப் படிக்குமாறு செய்து விடாதீர்கள்.
இன்று இந்த செய்தியை எழுதி முடித்தபோது சின்ன ஆறுதல் ஒன்று கிடைத்தது.. அதாவது இன்று காசிமேடு மீன் சந்தைக்கு மீன் வாங்க மொத்த வியாபாரிகளை மட்டுமே காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். இதனால் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதுவே ஒரு நல்ல ஆரம்பம்தான்.. ஆறுதல் தருகிறது.. கூடவமே நம்பிக்கையும் பிறக்கிறது. இது தொடர்ந்தால் ரொம்ப நல்லது.
- நமது வாசகர்