உங்கள் தோளுக்கு சூட்டும் மாலையில் நானும் ஒரு பூ! முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய வைரமுத்து
சென்னை: பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநிலங்களின் முதல்வர்களே நியமித்துக் கொள்ளலாம் என்ற உரிமையை பெற்றுத் தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா நடைபெறவுள்ள நிலையில் கவிப்பேரரசு வைரமுத்துவும் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம்! பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநிலங்களின் முதல்வர்களே நியமித்துக் கொள்ளலாம் என்ற வரலாற்று உரிமையை உச்சநீதிமன்றத்தில் போராடிப் பெற்றுத் தந்த உங்களுக்குக் கல்வியாளர்கள் கூடிப் பாராட்டு விழா நிகழ்த்துவது உங்கள் வெற்றிக்குச் சூட்டும் மகுடமாகும்.

கண்ணகிக்குப் பெருமை கற்புக்கரசி என்று பெண்களால் பாராட்டப்பட்டதுதான் என்று இளங்கோவடிகள் எழுதினார். அது போல் ஒரு ஆட்சித் தலைவருக்கு சிறப்பு கல்வியாளர்களால் கொண்டாடப்படுவதுதான்.
முத்தமிழறிஞர் கலைஞர் இருந்திருந்தால் இந்த வெற்றியில் மகிழ்ந்து உங்கள் நெற்றியில் இன்னொரு முறை முத்தமிட்டிருப்பார். என் மனம் எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்நாட்டுக்காக தவம் செய்த நீங்கள் இந்தியா முழுமைக்கும் மழை வரம் பெற்றுத் தந்திருக்கிறீர்கள். அதனால் இந்த விழா ஒரு தேசியத் திருவிழாவாகிறது. கல்வியாளர்கள் உங்கள் தோளுக்குச் சூட்டும் மாலையில் நானும் ஒரு பூவாக இருக்கிறேன், வாழ்த்துகிறேன் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களின் மசோதாக்களுக்கு சட்ட ரீதியாக ஒப்புதல் பெற்று தந்த முதல்வருக்கு உயர்கல்வித் துறை சார்பில் இன்று மாலை பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை அமைச்சர் கோவி செழியன் கடந்த 25 ஆம் தேதி சட்டசபையில் அறிவித்திருந்தார். அவர் பேசுகையில் "உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை பெற்றுத் தந்து தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளை பெற்று தந்துள்ள முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என பல்கலைக்கழக வேந்தர்கள், துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், கல்லூரியின் கூட்டமைப்பினர், கல்லூரி மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
அதற்கு முதல்வர் இசைவு தெரிவித்துள்ளார். அதன்படி, துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மீட்டெடுத்து மாநில சுயாட்சியை உறுதிப்படுத்திய முதல்வருக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மே 3ம் தேதி மாலை 4 மணிக்கு பாராட்டு விழா நடக்கிறது. இதில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

அதன்படி, இன்று மாலை மாநில சுயாட்சி நாயகனுக்கு மகத்தான பாராட்டு எனும் பெயரில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. பல்கலைக்கழக வேந்தர்கள், துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு, தனியார் கலைக் கல்லூரிகள் கூட்டமைப்பு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் என அனைவரும் இணைந்து விழாவை நடத்த உள்ளனர்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் மற்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில், அமைச்சர் கோவி.செழியன், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் தலைவர் முனிரத்தினம் உள்ளிட்டோர் விழாவில் உரையாற்ற உள்ளனர்.












Click it and Unblock the Notifications