கிமு 5 - கிபி 10-ம் நூற்றாண்டு வரையிலான கீழடி- அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு அறிக்கை சொல்வது என்ன?
கீழடியின் முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா
சென்னை: கீழடியில் கிமு 5-ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.10-ம் நூற்றாண்டு வரை பொதுமக்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் வாழ்ந்து உச்சமான நாகரிக அடையாளங்களை விட்டுச் சென்றுள்ளனர் என்றார் அகழாய்வை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன்.
2014-15, 2016 ஆண்டுகளில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடியில் 2 கட்டங்களாக அகழாய்வு பணிகளை மேற்கொண்டார். பின் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்ட போது சர்ச்சை வெடித்தது. தற்போது வரை மொத்தம் 8 கட்டங்களாக கீழடி அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முதல் 2 கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய தொல்பொருட்கள் தலைமை இயக்குநரிடம் தொல்லியல் ஆய்வறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் விவரங்களை பிபிசி தமிழோசை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: கீழடியில் நிலவிய கலாச்சாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரீகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்த கேள்விகளுக்கு விடை தருகிறது.
கீழடி அகழாய்வுகளானது மூன்று வகையான பண்பாட்டு காலகட்டம் நிலவியிருக்கக் கூடிய சாத்தியத்தை வெளிப்படுத்துகிறது. கிமு 8 முதல் கிமு 5 வரையிலான காலத்தில் மட்கக் கூடிய பொருட்களால் கட்டுமானங்கள் கட்டப்பட்டிருந்தன. இக்கால கட்ட மண் இடுக்குகளில் இரும்புப் பொருட்கள், கறுப்பு - சிவப்பு மட்பாண்டங்கள், கிறுக்கல் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இடைக்கற்கால கருவிகள் கிடைத்துள்ளன. இரும்புகாலத்தில் வளர்ச்சி அடையத் தொடங்கி இருக்கிறது.

கீழடி 2-வது கால கட்டம் என்பதை கிமு 5 முதல் கிமு 1-ம் நூற்றாண்டு வரை எனலாம். இக்காலத்தில் கீழடி பெரும் வளர்ச்சி அடைந்திருந்தது. செங்கல் கட்டுமானங்கள், இரட்டை சுவர் உலைகள் ஆகியவற்றை கூறலாம். சுடுமண் உறை கிணறுகள், சுடுமண் குழாய்கள் ஆகியவற்றை குறிப்பிடலாம். தமிழ் பிராமி பானை ஓடுகள், கிறுக்கல் பானை ஓடுகளை சொல்லலாம். இவற்றின் அடிப்படையில் கீழடி நகரப் பண்புகளைக் கொண்ட முக்கியமான இடமாக இருந்திருக்க வேண்டும்.
கீழடிக்கும் இலங்கைக்குமான வணிகத் தொடர்புகள் உறுதியாகின்றன. இந்தியாவின் பிற பகுதிகள், உலகின் பிற பகுதிகளுடன் கீழடி தொடர்பில் இருந்து உள்ளதை காட்டும் பொருட்கள் நிறைந்து கிடக்கின்றன. கீழடி கட்டிடத் தொகுதிகள் மிக முக்கியாமனவையாகவும் பார்க்கப்படுகிறது.
கீழடி 3-வது கால கட்டம் கிமு 1-ம் நூற்றாண்டு முதல் கிபி 3-ம் நூற்றாண்டு வரை எனலாம். ஆனால் ராஜராஜன் காசுகள் கிடைத்ததை வைத்து கிபி 10-ம் நூற்றாண்டு வரை கூட கீழடியின் 3-வது கால கட்டம் நீடித்திருக்கலாம் என நம்பிக்கை கொள்ளப்படுகிறது. 10-ம் நூற்றாண்டுக்குப் பின்னரே கீழடி கைவிடப்பட்ட நகரமாகி இருக்கலாம்.












Click it and Unblock the Notifications