சிலந்தி ஆற்றில் அனுமதியின்றி தடுப்பணை கட்ட தடை.. கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே அனுமதியின்றி தடுப்பணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் இன்று கேரளா அரசுக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் அருகே பெருகுடா பகுதியில் சிலந்தி ஆறு ஓடுகிறது. இந்த சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியானது. சிலந்தி ஆற்றில் குறிப்பிட்ட அந்த பகுதியில் தடுப்பணை கட்டும்பட்சத்தில் தமிழ்நாட்டில் விவசாயம் பாதிக்கப்படும்.

ஏனென்றால் இந்த பகுதியில் 10 அடி உயரத்தில் 120 அடி நீளத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டால் அதன்பிறகான பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து என்பது தடைப்படும். அதோடு திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கரில் விவசாய பாசனத்துக்கான தண்ணீர் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்படும். இதனால் சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரளா அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் முயற்சியை கேரளா அரசு கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினார். மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் பினராயி விஜயன் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினர். இதுபற்றி தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ‛‛தமிழகத்தின் உரிமையை சட்டரீதியாக மட்டுமல்லாமல் அனைத்து விதத்திலும் நிலைநாட்டுவோம்" என தெரிவித்து இருந்தார்.
இந்த விவகாரம் பூதாகரமானது. இந்நிலையில் தான் நாளிதழ்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த வழக்கை இன்று விசாரித்தது. அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது கேரள அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில், ‛‛சிலந்தி ஆற்றின் நடுவே நடக்கும் கட்டுமானத்தை நிறுத்த உத்தரவிட வேண்டும். இந்த கட்டுமானத்தால் தமிழகம் பாதிக்கப்படும்'' என கூறப்பட்டது. கேரளா தரப்பில், ‛‛சிலந்தி ஆற்றில் தடுப்பணை எதுவும் கட்டப்படவில்லை. நீரை தடுத்து உள்ளூர் மக்களுக்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான கலிங்கு தான் அமைக்கப்பட்டு வருகிறது. தடுப்பணை கட்டப்பட்டால் முறையான அனுமதி பெற்ற பிறகே நிறைவேற்றப்படும்'' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் சார்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதில், ‛‛சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய வன விலங்குகள் வாரியத்திடம் கேரள அரசு உரிய அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி பெற்றால் மட்டுமே அத்திட்டத்தை தொடர அனுமதிக்க முடியும். உரிய அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றில் மேற்கொள்ளும் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்'' என உத்தரவிட்டது.
மேலும் வழக்கு தொடர்பாக கேரள நீர்வள ஆதாரத்துறை மற்றும் வனத்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உரிய அனுமதி பெறாவிட்டால் திட்டத்துக்கு தடை விதிக்கப்படும் எனக்கூறிய பசுமை தீர்ப்பாயம் வழக்கின் மீதான அடுத்த விசாரணை ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications