பெண்களுக்கு 1000 ரூபாய் பிச்சை போட்டா அவங்க ஓட்டு போடுவாங்களா? வாயை விட்ட குஷ்பு.. கொந்தளிப்பு!
சென்னை: தாய்மார்களுக்கு 1000 ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு ஓட்டு போடுவார்களா என குஷ்பு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கலந்துகொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார் குஷ்பு.

அப்போது பேசிய குஷ்பு, "தாய்மார்களுக்கு 1000 ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா? தமிழ்நாட்டில் 3,500 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் திமுக ஆள் தானே? இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார். போதைப்பொருளுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. தமிழ்நாட்டுத் தாய்மார்களின் பிரச்சனையை தீர்த்து வைக்கவில்லை" என ஆவேசமாகப் பேசியுள்ளார்.
முன்னதாக பேசிய குஷ்பு, "திமுகவில் பிரசாரம் செய்ய யாருமில்லை. அதனால் கமல்ஹாசன் போன்ற முகம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் போனாலும் கூட்டம் வராது. கூட்டம் கூட்டுவதற்காக அவர்களுக்கு கமல்ஹாசன் வேண்டும். அதனால் சேர்த்திருக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் காங்கிரஸ் மற்றும் வேறு கட்சிகளில் இருந்து விலகி ஏராளமானோர் பா.ஜ.கவில் இணைகிறார்கள். காரணம், மோடி மீது அவர்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கை. நம் நாடு கடைசி ஐந்தாவது இடத்தில் இருந்து டாப் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. கடந்த 65-வது ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் சாதிக்க முடியாததை 10 வருடத்தில் மோடி சாதித்துக் காட்டியிருக்கிறார். இதுதான் காங்கிரஸுக்கும், பா.ஜ.கவுக்கும் இடையேயான வித்தியாசம்.
காங்கிரஸால் சொந்தக் காலில் நிற்க முடியவில்லை. எந்த இடத்துக்குப் போனாலும் காமராசர் பெயரை வைத்துத் தானே பிச்சையெடுக்கிறார்கள். திமுக அல்லது அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் மாறி மாறிப் பயணம் செய்கிறார்கள்." என விமர்சித்துள்ளார் குஷ்பு.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை பிச்சை என கொச்சைப்படுத்தி பேசுவதாக குஷ்புவுக்கு எதிராக கண்டனங்கள் கடுமையாக எழுந்துள்ளன. தமிழ்நாட்டுப் பெண்களை அவமதிக்கும் வகையில் குஷ்பு பேசியுள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
"தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், 'உரிமைத்தொகை' என்று அழைக்கிறார். பாஜக குஷ்பு 'பிச்சை' என்று மக்களை கொச்சைப்படுத்துகிறார். ஏழை மக்களை அசிங்கப்படுத்தும் குஷ்பு மன்னிப்பு கேட்பாரா ? பெண்களை கொச்சைப்படுத்தும் குஷ்புவை பாஜக கட்சியை விட்டு நீக்குமா?" என திமுக செய்தித் தொடர்பாளர் சூரியா கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications