"காங்கிரஸுக்கு சூடு, சொரணை இருந்தால் திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டும்".. கொந்தளித்த குஷ்பு!
சென்னை: "காங்கிரஸ் கட்சிக்கு சூடு, சொரணை, மானம் இருந்தால் திமுக கூட்டணியை விட்டு எப்போதோ வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு அது கிடையாது." என நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் ஆட்சியில் பங்கு கோரியும், கூட்டணியில் அதிக சீட் கேட்டும் திமுகவுக்கு எதிரான குரல்கள் எழுந்து வரும் சூழலில், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. குஷ்புவின் கடுமையான விமர்சனம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது பற்றிப் பேசிய குஷ்பு, "கேப்டன் விஜயகாந்த் தன் வாழ்நாளில் அறிவாலய வாசலை கூட மிதிக்காதவர். யாராவது அழைக்க மாட்டார்களா என்று காத்திருந்து வேறு வழியில்லாமல் பிரேமலதா திமுகவுடன் இணைந்துள்ளார். அவரது இந்த முடிவை கேப்டனின் ஆன்மா மன்னிக்காது." என்றார்.
திமுகவை கடுமையாக சாடிய குஷ்பு, "திமுக இந்த முறை ஜெயிக்கப் போவதில்லை என்பது தெரிந்துவிட்டது. எனவே யார் வந்தாலும் சேர்த்துக் கொண்டு கரையேற முயற்சிக்கிறது. ஆனால் இந்த முறை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதிமுக - பாஜக அலையில் சிக்கி திமுக காணாமல் போகும்" என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த குஷ்பு, "திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வெளியே போய்விட்டால் என்ன செய்வது என்ற தவிப்பில் தேமுதிகவையும் இழுத்துப் போட்டுள்ளார்கள். காங்கிரஸுக்கு சூடு, சொரணை, மானம் இருந்தால் திமுக கூட்டணியை விட்டு எப்போதோ வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு அது கிடையாது." எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும் பேசிய குஷ்பு, "காமராஜர் காலத்துக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலகட்டத்திலும் தனியாக நிற்க முயற்சி எடுத்தது கிடையாது. கரைந்து போன அந்தக் கட்சி இனி எந்தக் காலத்திலும் கரையேறாது" என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொகுதி பங்கீடு, கூட்டணி ஆட்சி என தலைவர்களின் பரபரப்பு பேட்டிகள் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளன. குறிப்பாக ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியில் உள்ள விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இதனால் திமுக - காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி திமுக உடன் கூட்டணியை தொடருமா என்ற விவாதமும் நடந்து வருகிறது. இந்தச் சூழலில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. தேமுதிக கூட்டணியில் இணைந்துள்ளது திமுக கூட்டணிக்கு பலம் தரும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications