பில்கிஸ் பானு.. ஒரு ட்வீட்டில் பாஜகவை பதம் பார்த்த குஷ்பு.. உலுக்கும் கேள்வி!
சென்னை: பல்கிஸ் பானோவாக இருந்தாலும் எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய்யப்பட கூடாது, அரசியல் கட்சிகளுக்கும் , சித்தாந்தங்களுக்கும் அப்பாற்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.
2002 ஆம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கரசேவகர்கள் 59 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து குஜராத்தில் கலவரம் வெடித்தது. அப்போது சிறுபான்மையினர் தாக்குதலுக்குள்ளான நிலையில் அவர்கள் அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு தப்பி சென்றனர்.
அப்போது பில்கிஸ் பானோ என்ற 5 மாத கர்ப்பிணியும் தனது குடும்பத்தினருடன் தாக்குதலில் இருந்து தப்பிக்க கிராமத்திலிருந்து தப்பி சென்றார். அப்போது சாலையில் தங்கியிருந்த போது பில்கிஸ் பானோவின் குடும்பத்தை ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்கியது. இதில் பில்கிஸின் மகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். கர்ப்பிணியான பில்கிஸ் பானோ கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

11 பேர்
இந்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஆயுள் சிறை தண்டனை பெற்ற 11 பேரில் ஒருவர் தன்னை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திரு்நதார். இதையடுத்து நீதிமன்ற அறிவுறுத்தலின்படி 11 பேரையும் விடுவிப்பது தொடர்பாக குஜராத் அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்கள் 11 பேரையும் விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.

11 பேர் விடுதலை
இதையடுத்து அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையின்படி 11 பேரையும் சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுதலை செய்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு அநீதி வழங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. 11 பேரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயிர் வாழ அஞ்சும் பெண்
இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு சுந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு உயிர் வாழவே மனம் அஞ்சும் பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விடுவிக்கக் கூடாது.

மனிதகுலத்திற்கு அவமானம்
அவ்வாறு விடுதலை செய்தால் அது மனிதகுலத்தையும் பெண்மையையும் அவமானப்படுத்தும் செயலாகும். பில்கிஸ் பானோவாக இருந்தாலும் வேறு எந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு நியாயம் நீதி கிடைக்க அரசியல் கட்சி மற்றும் சித்தாந்தங்களை தாண்டி ஆதரவு கொடுக்க வேண்டியது அவசியம் என குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.

சொந்த கட்சி
சொந்த கட்சி ஆளும் மாநிலமான குஜராத்தில் பாலியல் பலாத்காரம் செய்தது நிரூபணம் ஆகி சிறையில் அடைக்கப்பட்டவர்களை தியாகி போல் விடுதலை செய்துள்ளதை குஷ்பு சுந்தர் கண்டித்திருப்பது பாராட்டுக்குரியது. குஷ்பு எந்த கட்சியில் இருந்தாலும் தவறு என்றால் தட்டி கேட்கும் குணம் கொண்டவர். அதிலும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தட்டி கேட்பார்.

பெரியார் சிலை அவமதிப்பு
கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவம் குறித்து குஷ்பு தனது ட்விட்டரில் கூறுகையில், கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வெட்கக்கேடான செயலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். பெரியார் சிலைக்கு ஆரஞ்சு வண்ணம் தீட்டுவது ஒரு அவமரியாதை செயலின் தெளிவான அறிகுறியாகும். கோழைகள்தான் இதைத் செய்கிறார்கள் என காட்டாமாக பதிவை குஷ்பு போட்டிருந்தார்.

காவி
அதாவது காவி என்றால் அது பாஜகதான் என்ற போதிலும் பெரியார் சிலைக்கு ஆரஞ்சு வண்ணம் தீட்டியது அவமரியாதை என சொல்லியதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. கடந்த 2018ஆம் ஆண்டு திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை போல தமிழகத்தில் பெரியார் சிலைகளும் அகற்றப்படும் என எச் ராஜாவின் ட்விட்டரில் இருந்து ஒரு பதிவு வெளியாகியிருந்தது. அப்போது காங்கிரஸில் இருந்த குஷ்பு என்னையும் என்னை போன்ற பலரையும் தாண்டி செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என்பதை பார்க்கிறேன். உங்கள் நிழல் கூட பெரியார் சிலையை தொட முடியாது என பதிவிட்டிருந்தார். குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் பெரியாருக்காக பேசுவதாக பலர் கருதியிருந்தனர். ஆனால் பாஜகவுக்கு வந்த பிறகு கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு கோழைகள் என்ற வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளார்.

பெரியார் சிலை விவகாரம்
பெரியார் சிலை விவகாரத்தை தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக பில்கிஸ் பானோ விவகாரத்திலும் குஷ்பு குரல் கொடுத்துள்ளதால் அவரது தைரியத்தை பலர் பாராட்டி வருகிறார்கள். சொந்த கட்சியினராக இருந்தாலும் குஷ்புவை போல் நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் கட்சி பாகுபாடு இன்றி குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எந்த கட்சிக்கு போனாலும் குஷ்பு குஷ்புதாங்க!












Click it and Unblock the Notifications