தார் ஜீப்பை ஸ்டார்ட் செய்த குஷ்பு.. பார்த்தும்மா மெதுவாக போங்கன்னு சொன்ன வானதி சீனிவாசன்!
சென்னை: 75 ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி சென்னையில் நடத்தப்பட்ட பேரணியில் தார் ஜீப்பில் வானதி சீனிவாசனை உட்கார வைத்து குஷ்பு அந்த வாகனத்தை இயக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
75 ஆவது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வைர விழா என்பதால் இந்த ஆண்டு இந்த விழா கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு சுதந்திர தினம் ஆசாதி கா அம்ரித் மகாஉத்சவ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு வீடுதோறும் மூவர்ணக் கொடி என்ற இயக்கத்தை அறிவித்துள்ளது.

பொதுமக்கள்
அதாவது பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன்போ அல்லது மொட்டை மாடியிலோ இரவு, பகல் என வித்தியாசம் பாராமல் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியை ஏற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசியக் கொடி விற்பனை அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.

1 கோடி வீடுகளுக்கு
தமிழகத்தில் உள்ள 1 கோடி வீடுகளுக்கு தமிழக பாஜக சார்பில் தேசியக் கொடிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அக்கட்சி சார்பில் சுதந்திர போராட்ட வீரர்களை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின பேச்சு போட்டி, சைக்கிள் பேரணி, நடைபயணம் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சமூகவலைதளங்கள்
அது போல் சமூகவலைதளங்களின் முகப்பில் தேசியக் கொடியை அனைவரும் வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். அதன்படி பாஜகவினர் தேசியக் கொடியை முகப்பில் வைத்து இப்போதே கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்த நிலையில் சென்னை பட்டினம்பாக்கத்தில் வீடுதோறும் மூவர்ணக் கொடி நிகழ்ச்சிக்கு பாஜக மகளிரணியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஜீப்பை இயக்கிய குஷ்பு
இந்த நிகழ்ச்சியில் மாநில மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது தார் ஜீப்பில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட மகளிரணியினரை உட்கார வைத்துக் கொண்டு குஷ்பு அந்த ஜீப்பை இயக்கினார்.












Click it and Unblock the Notifications