சென்னையில் பலியான கிக் பாக்சர்.. தலையில் பலத்த காயம்.. 3 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த சோகம்!
சென்னை : சென்னையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் விளையாட்டு போட்டியின்போது காயமடைந்த அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த வீரர் யோரா டேட் உயிரிழந்தார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான வாகோ இந்தியா கிக் பாக்ஸிங் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் போட்டியில் கடந்த 21ஆம் தேதி மகாராஷ்டிரா மாநில அணியைச் சேர்ந்த கேசவ் முடேல் என்பவர் தாக்கியதில் அருணாச்சல பிரதேச வீரர் யோரா டேட் என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி யோரா டேட் உயிரிழந்தார்.
குட்நியூஸ்! சென்னையில் வலம் வர போகும் நவீன பேருந்துகள்.. இவ்வளவு வசதிகளா! எப்படி இருக்கும் தெரியுமா?
கிக் பாக்ஸிங் போட்டி
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான வாகோ இந்தியா சீனியர்ஸ் மற்றும் மாஸ்டர்ஸ் கிக் பாக்ஸிங் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று வருகிறார்கள். இதில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி நடந்த போட்டியில் மகாராஷ்டிரா வீரர் கேசவ் முடேல், அருணாச்சல பிரதேச வீரர் யோரா டேட் ஆகியோர் மோதினர்.
வீரர் பலி
போட்டியின் பீது கேசவ் முடேல் தாக்கியதில் யோரா டேட்டுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தனக்கு மயக்கமாக வருவதாக அவர் தெரிவித்ததை அடுத்து உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். யோரா டேட்டுக்கு மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
அமைச்சர் அஞ்சலி
அவரது உடல் அருணாச்சல பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50ஆயிரத்தை நிவாரணமாக யோரா டேட் குடும்பத்துக்கு அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
வீரர் மறைவுக்கு இரங்கல்
கிக் பாக்ஸின் வீரர் யோரா டேட் மறைவுக்கு, அருணாச்சல பிரதேச முதல்வர் பிமா கண்டு இரங்கல் தெரிவித்துள்ளார். எங்களின் சிறந்த கிக் பாக்ஸர் யோரா டேட் இறப்பு செய்தி கேட்டு அதிர்ந்துவிட்டேன். என்னுடைய சோக்தை வெளிப்படுத்த வார்த்தையில்லை. அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கல்" எனத் தெரிவித்துள்ளார். அருணாச்சல பிரதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு, அருணாச்சல பிரதேச கிக்பாக்ஸிங் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் யோரா டேட் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன.