கிளாம்பாக்கம்.. 15 வருசத்திற்கு ஒருமுறை பஸ் ஸ்டாண்ட்டை வெளியே கட்டினால், என்ன மாதிரி திட்டமிடல்?
சென்னை: ஒவ்வொரு 15 வருடத்திற்கும் பேருந்து நிலையத்தை சென்னை நகருக்கு வெளியே கொண்டு சென்றால், என்ன மாதிரி திட்டமிடல்? தொலைநோக்கோடு அமைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட கோயம்பேடு மத்திய பேருந்து நிலையத்தின் கதி இனியென்ன? என்ற கேள்வி எழுகிறது
இதேபோல் பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் அப்படியேபேருந்து நிலையங்கள் இருக்கும் போது சென்னையில் மட்டும் மாறுவது ஏன் என்ற கேள்வியும் மக்களிடையே எழுகிறது.

சென்னையின் புறநகர் பகுதியான அதாவது செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் உள்ள கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சம் செலவில் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் தென் மாவட்டங்களில் செல்லும் பொதுமக்களுக்காக இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முறையான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை..
இதனிடையே நேற்று அமாவாசை தினத்தை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்து கழகம், அரசு போக்குவரத்து கழகம் போன்றவற்றின் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இல்லாத பஸ்கள் தென்மாவட்டங்களில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா சிக்னல் அருகே சென்று பின்னர் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் நுழைந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நடை மேடைகளில் நிறுத்தப்பட்டன. பின்னர் பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பஸ்களும் மீண்டும் தென் மாவட்டங்கள் நோக்கி ஜி.எஸ்.டி. சாலை வழியாக செல்லும் சோதனை ஓட்டம் நடந்தது. இதே போல கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மாநகர பஸ் நிலையத்தில் மாநகர பஸ்கள் உள்ளே சென்ற பின்னர் வெளியே வருவது போல் சோதனை ஓட்டம் நடந்தது.
இந்த ஆய்வு ஏன்? பஸ்கள் பேருந்து நிலையத்திற்குள் உள்ளே சென்று வெளியே வரும்போது ஜி.எஸ்.டி. சாலைகளில் எந்தெந்த இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பது அறியவும், பஸ்கள் உள்ளே சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வெளியே வரும் சாலையில் உள்ள வளைவில் பஸ்கள் திரும்பும்போது இடையூறுகள் ஏற்படுகிறதா என்பதை அறியவும் அரசு அதிகாரிகள் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தி உள்ளார்கள்.
இதனிடையே வெகுவிரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்வர் திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கிளாம்பாக்கம் , வண்டலூர், தாம்பரம் பகுதி மக்களிடையே எதிர்பாரப்பு நிலவுகிறது. அதேநேரம் கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் இன்று வரை அமைக்கப்படவில்லை. அதேபோல் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். இவை இரண்டும் அமைக்கப்பட்டால் மட்டுமே மக்களுக்கு எளிதாக இருக்கும் என்கிற நிலை இருக்கிறது.
ஏனெனில் கிளாம்பாக்கம் என்பது சென்னையின் மிக முக்கியமான நுழைவு வாயிலாக உள்ளது. துறைமுகம் செல்லும் லாரிகள், மீஞ்சூர் வெளிவட்ட சாலை, தாம்பரம் பெருங்களத்தூர் சாலை, காஞ்சிபுரம் வண்டலூர் சாலை, கேளம்பாக்கம் சாலை, வண்டலூர் பூங்கா, செங்கல்பட்டு திருச்சி சாலை ஆகியவை இணையும் இடத்தில் இருக்கிறது.
எனவே இங்கு போக்குவரத்து நெரிசல் அல்லது ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் சென்னைக்கு நுழையவே முடியாத கடினமானநிலை ஏற்படும். அப்படியான நான்கு ரோடு சந்திப்பில் இருப்பதால் தெளிவான திட்டமிடலுடன் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது ஒருபுறம் எனில், சென்னையின் முதல் முதலாக பாரிஸ் கார்னரில் பேருந்து நிலையம் இருந்தது. காய்கறி சந்தையும் கொத்தவால் சாவடியில் தான் இருந்தது.
2003ம் ஆண்டு தான் சென்னையின் அன்றைய புறநகர் பகுதியான கோயம்பேட்டில் அதாவது இன்றைய சென்னையின் மையப்பகுதியில் அனைத்து பேருந்துகள் வந்து செல்லும் வகையில் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. பேருந்து நிலையத்தால் குரோம்பேட்டை, பல்லாரவரம், தாம்பரம், வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர், பகுதிகள் சிக்கலில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதன் காரணமாகவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையமும் அமைக்கபட்டது.
இதில் என்ன சிக்கல் என்றால், ஒவ்வொரு 15 வருடத்திற்கும் பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியே கொண்டு சென்றால், என்ன மாதிரி திட்டமிடல்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.. தொலைநோக்கோடு அமைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட கோயம்பேடு மத்திய பேருந்து நிலையத்தின் கதி இனியென்ன? அடுத்த 15 வருடத்தில், கிளாம்பாக்க நிலையம் மூடப்பட்டு செங்கல்பட்டிற்கு போய்விடுமா? பெங்களூரு ஹைதராபாத்தில் அப்படியே பேருந்து நிலையங்கள் இருக்கும் நிலையில் சென்னையில் மட்டும் மாறிக்கொண்டே இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. பேருந்து நிலையங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தால் மாறும் பகுதிகள் அனைத்தும் மக்கள் நெருக்கம் அதிகமாகும். அத்துடன் கிளாம்பாக்கம் பகுதியுமே நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது.
பேருந்து நிலையங்களை அடிக்கடி மாற்றுவதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள். ஆந்திரா செல்ல வேண்டியவர், பெங்களூரு செல்ல வேண்டியவர். கிளாம்பாக்கம் வந்து தனியாக பேருந்து பிடித்து கோயம்பேடு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். புதிய பேருந்துநிலையங்களை உருவாக்குவதற்கு பதிலாக இருக்கும் பேருந்து நிலையத்திற்கு மக்கள் எளிதாக வருவதற்கான வழிகளை ஏற்படுத்த அரசு யோசிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஏனெனில் கிளாம்பாக்கம் என்பது சென்னையில் இல்லை. சென்னையில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. அதற்கு வருவதற்கு ரயில், மெட்ரோ உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை..
வெளியூர் செல்வோர் பைகளை எடுத்துக்கொண்டு அலைவது கடினம். எனவே அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு புறநகர் ரயில் நிலையத்தை உடனே கிளாம்பாக்கம் பகுதியில் அமைக்கக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகே பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல் தாம்பரம் வரை செல்லும் புறநகர் ரயில்களை கிளாம்பாக்கம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications