இன்னும் ஆறே மாசம் தான்.. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ரெடி ஆகிடும்.. தெற்கு ரயில்வே தகவல்!
சென்னை: சென்னை மக்களுக்கு ஒரு சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்ட பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் சுமார் ரூ.400 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, 'கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து முனையம்' என்று பெயரிடப்பட்டு கடந்த டிசம்பர் மாத இறுதியில் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், சென்னை நகரிலிருந்து தொலைவில் இருப்பதால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் மின்சார ரயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், தாம்பரம் - செங்கல்பட்டு வழித் தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் - செங்கல்பட்டு வழித் தடத்தில் பேருந்து நிலையத்துக்கு எதிரே ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வேயிடம் தமிழக அரசு வலியுறுத்தியது. இதையடுத்து, ரூ. 20 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் கடந்த அக்டோபரில் ஒப்பந்தப் புள்ளி கோரியது.
இதையடுத்து, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் 3 நடைமேடைகளுடன் புதிய ரயில் நிலையத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சென்னை ரயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் இறுதியிலேயே தொடங்கப்பட்டதால், தற்போது அங்கு செல்ல பயணிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோர் கிளாம்பாக்கத்திற்கு நேரடியாக மின்சார ரயிலில் செல்ல முடியாமலும், சொந்த ஊர்களில் இருந்து சென்னை வருவோர் கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை நகருக்குள் செல்வதற்கு பேருந்தை மட்டுமே எதிர்பார்க்கும் நிலை உள்ளது. இந்நிலையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி இன்னும் 6 மாதங்களில் முடிவடையும் என தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இதுதொடர்பாகப் பேசியுள்ள தெற்கு ரயில்வே கோட்ட பொது மேலாளர் ஆர்.என்.சிங், மாநில அரசும் ரயில்வே நிர்வாகமும் இணைந்து கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இன்னும் 6 மாதங்களுக்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய ரயில்வே முனையமாக வில்லிவாக்கம் ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட உள்ளது. விரிவான திட்ட அறிக்கை முடிக்கப்பட்டு அடுத்த 3 மாதங்களில் நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகள் தொடங்கும். சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்திற்கு அடுத்ததாக வில்லிவாக்கம் முனையம் உருவாக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications