மழலையர் பள்ளி குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டுமா? - மா.சுப்ரமணியன் சொன்னது இதுதான்
உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல் படி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்று மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: கொரோனாவில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறி வரும் நிலையில் மழலையர் பள்ளிக்குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டுமா? தேவையில்லையா என்று மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.
அரசு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் 35 கோடி மதிப்பீட்டில் தயாராகி வரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை அரங்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேசுகையில், மாநில அரசு மருத்துவமனைகளில் முதன்முதலாக ரோபோடிக் அறுவை சிகிச்சை அரங்கம் தமிழகத்தில் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். கேன்சர் தொற்றினை முதல் நிலையிலேயே கண்டறிவதற்காக தொடர் முயற்சிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
காஞ்சிபுரம், மதுரை, நாகை, சேலம் ஆகிய மாவட்டங்களில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருவதாக கூறிய அமைச்சர், முதல் மற்றும் இரண்டாம் நிலையிலேயே புற்றுநோய் நோயாளிகளை கண்டறிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மக்களை தேடி மருத்துவம்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் விரைவில் 50 லட்சம் பேர் பயனடைய உள்ளதாகவும் வரும் ஞாயிற்றுக்கிழமை சித்தலபாக்கம் பகுதியில் 50வது லட்சம் பயனாளியை முதல்வர் நேரில் சென்று சந்தித்து மருத்துவ சேவை மற்றும் அதிநவீன 188 புதிய ஆம்புலன்ஸ் சேவையையும் முதல்வர் தொடங்க இருப்பதாக தெரிவித்தார்.

இன்னுயிர் காப்போம்
இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின்படி விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனியாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் 18,580 பேருடை உயிர் காக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 16.97 கோடி ரூபாய் செலவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவமனைகள் எண்ணிக்கை 609 லிருந்து 640 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சாலை விபத்து
இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலமாக ஏற்படக்கூடிய சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகள் கணிசமாக குறைந்து இருப்பதாகவும், தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் படிப்படியாக பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எல்.கே.ஜி குழந்தைகளுக்கு முக கவசம்
மழலையர் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல் படி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications