கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு ஆதரவாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சென்னை: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் விதமாகவும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயதாகும் பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 33 வயதாகும் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை உடனே தூக்கிலிட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா போலீஸிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ இந்த விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் மருத்துவர்களிடம் விசாரணையை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பெண் மருத்துவரின் படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தியதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினார்கள்.
இதேபோல் ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். நாகலாந்தில் உள்ள NSUI அமைப்பு மெழுகுவர்த்தி ஏந்தி தனது எதிர்ப்பை பதிவு செய்தது. ராஜஸ்தானில் பாஜக அமைப்பினரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராடினார்கள். பெண் மருத்துவரின் படுகொலையைக் கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷில் டாக்டர் மற்றும் நர்சிங் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து குரல் எழுப்பினார்கள். இதேபோல் நாட்டின் பல்வேறு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கொல்கத்தா மாணவிக்கு ஆதரவாக மெழுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்.












Click it and Unblock the Notifications