உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்... ஈஸ்வரன் வலியுறுத்தல்
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நேர்மையாக நடைபெறுமா என கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் வினவியுள்ளார்.
மேலும், உள்ளாட்சித் தேர்தலை ஊரகம், நகர்புறம் என பிரித்து அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது என அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

உள்நோக்கம்
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் தேர்தல் நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் விவாத பொருளாக மாறியிருக்கிறது. தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தலை அறிவிக்காமல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டதாக பார்க்கப்படுகிறது.

முறைகேடுகள்
தமிழகம் முழுவதும் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்துவது சரியானதாக இருக்காது. முறைகேடுக்கும், குளறுபடிக்கும் வழிவகுக்கும். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தன்னுடைய கடமையை செய்வதற்கே உச்சநீதிமன்றம் கட்டாயப்படுத்த வேண்டிய நிலைமையில் தான் இருக்கிறது.

வார்டு மறுவரையறை
கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்ததால் மாநில தேர்தல் ஆணையத்தின் மீது தமிழக மக்களுக்கு இருந்த நம்பிக்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தலை நடத்துவது புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் உரிமைகளை நசுக்கும் செயலாகும்.

ஜனநாயகம்
புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை முடித்த பின்னரே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பது அனைவருடைய கோரிக்கையாக இருக்கிறது. தற்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி அறிவித்ததாக தெரியவில்லை. உச்சநீதிமன்றம் கொடுத்த அழுத்தத்தின் பெயரிலே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வலியுறுத்தல்
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் உள்ள சுணக்கத்தை மறைப்பதற்காகவே மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. எனவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி பதவிகளுக்கும் நேர்மையான முறையில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications