கொடைக்கானலில் வனத்துறை நிலம் அபகரிப்பு-"என்னாச்சு பதில் சொல்லுங்க"-அரசுக்கு பறந்த ஹைகோர்ட்நோட்டீஸ்
சென்னை: வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை அரசு உயரதிகாரி ஒருவர் பினாமிகள் மூலம் அபகரித்ததாக கூறப்படும் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூலாத்தூர் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான 1.85 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை, தமிழக முதன்மை கணக்கு தணிக்கை அதிகாரியாக உள்ள அம்பலவாணன் என்பவர் பினாமிகள் மூலம் அபகரித்ததாக கூறி பூலாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் மேலும் கூறுகையில், "கடந்த 2010-2013-ம் ஆண்டுகளில் நடந்த இந்த நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், அபோதைய மாவட்ட ஆட்சியர், அப்போதைய தாசில்தாரர், ஐஏஎஸ் - ஐபிஎஸ். அதிகாரிகள் என 35 பேர் வரை கூட்டு சேர்ந்து, தனக்கு எதிராக 11 பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். எனது குடும்பத்தினரையும் துன்புறுத்துகின்றனர்" எனத் தெரிவித்திருந்தார்.
இதுதவிர, இந்த வழக்கில் ஆவண மோசடி, ஆள்மாறாட்டம் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்த சிபிசிஐடி விசாரணையும் தற்போது கிடப்பில் போடப்பட்டு விட்டதாகவும், இந்த முறைகேடு தொடர்பாக கூடுதல் செயலாளர் அந்தஸ்து அதிகாரியை நியமித்து விசாரித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவானது, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்பு ஆணையர், உள்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் இந்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.