கோடநாடு வழக்கு: அடுத்த 8 நாட்கள் மிக முக்கியம்.. சயனை கண்காணிக்கும் போலீஸ்.. ஊட்டியில் விறுவிறுப்பு
சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அடுத்த 8 நாட்கள் மிக முக்கியம் என்பதால் போலீசார் தரப்பில் ஊட்டியில் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சயனையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
கோடநாடு வழக்கு தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்த அதிமுகவும் இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கால் ஆடிப்போய் இருக்கிறது. அதிலும் சயன் வாக்குமூலம் கொடுத்ததாக வெளியாகும் செய்திகள் அரசியலில் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.
இங்கு 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணைதான் தற்போது வேகம் எடுத்து இருக்கிறது. சயான், மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது இந்த வழக்கில் புகார் வைக்கப்பட்டது. வழக்கின் முக்கிய குற்றவாளி கனகராஜ் விபத்தில் பலியாகிவிட்டார்.

நீலகிரி
இந்த வழக்கு தற்போது நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடக்கிறது. இந்த கோர்ட் கொடுத்த அனுமதியின் பெயரில்தான் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடந்து வருகிறது. இவர்களிடம் மீண்டும் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. அதிலும் சயன் கொடுத்த வாக்குமூலம் இதில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சயன் இந்த வழக்கு விசாரணையில் பல புதிய தகவல்களையும், விவரங்களையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கோத்தகிரி போலீசார் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

வாக்குமூலம்
குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ், சூப்ரண்ட் ஆஷிஷ்ராவத் ஆகியோர் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சயன் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இவர் என்ன வாக்குமூலம் அளித்தார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை என்றாலும் கூட எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில தகவல்களை குறிப்பிட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வருகின்றன. இதனால்தான் எடப்பாடி பழனிசாமியும் தனக்கு எதிராக சதி நடப்பதாக ஊடகங்களில் பேட்டி கொடுத்து இருந்தார்.

சதி
இந்த நிலையில் அடுத்த கட்ட விசாரணைக்கு முன்பாக ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டி கோர்ட்டில் சமர்ப்பிக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது. ஊட்டி கோர்ட்டில் அடுத்தகட்ட விசாரணை வரும் 27ம் தேதி நடக்கிறது. 27ம் தேதி கோர்ட் விசாரணை என்பதால் அதாவது அடுத்த 8 நாட்கள் முக்கியம். இந்த 8 நாட்களுக்குள் முக்கிய விவரங்களை திரட்டி அதை கோர்ட்டில் சமர்ப்பிக்கும் முடிவில் போலீசார் உள்ளார்.

ஆதாரம்
இதில் போலீஸ் அதிகாரிகள் புதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க உள்ளனர். அந்த ஆதாரங்களை வைத்தே வழக்கின் பாதை மாறும். இதனால்தான் சயன் உள்ளிட்ட எல்லோரிடம் மீண்டும் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கப்பட்டு வருகிறது. இது போக சயன் தவிர்த்து மற்ற நபர்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அவர்களையும் போலீசார் சம்மன் அனுப்பி வர வைக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அடுத்த கோர்ட் விசாரணைக்கு முன்பாக மற்றவர்களையும் அழைத்து அவர்களிடமும் வாக்குமூலம் பெறப்படும்.

கேஸ்
இந்த புதிய வாக்குமூலங்களை வைத்து வழக்கு வலுவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சயன் ஒருமுறை விபத்தில் சிக்கி இருக்கிறார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி கனகராஜ் விபத்தில் பலியாகிவிட்டார். அவரை தொடர்ந்து சயனுக்கும் ஒரு முறை விபத்து ஏற்பட்டது. ஆனால் இந்த விபத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் அவர் தப்பிவிட்டார். இதனால் மீண்டும் அவருக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க போலீசார் இவரை கண்காணித்து வருகிறார்கள்.

விசாரணை
ஊட்டியில்தான் இவர் தங்கி இருக்கிறார். போலீஸ் விசாரணை தவிர வேறு எதற்காகவும் இவர் வெளியே செல்வது கிடையாது. வழக்கில் முக்கியமான சாட்சியம் மற்றும் குற்றவாளி என்பதால் அவரை எப்போதும் போலீஸ் கண்காணித்து வருகிறார்கள். இனி இந்த வழக்கில் போலீஸ் என்னென்ன ஆதாரங்களை தாக்கல் செய்யும், இவர் கொடுத்த வாக்குமூலத்தில் என்ன விவரம் இருக்கிறது என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications