கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சசிகலா, எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்க ஹைகோர்ட் அனுமதி
சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவையும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அது போல் அந்த கொலை கொள்ளை நடந்த சம்பவத்தின் போது மாவட்ட எஸ்பியாக இருந்த முரளி ரம்பாவையும் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்குத்தான் அந்த பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தன, என்னென்ன காணாமல் போயுள்ளன என்பது தெரியவரும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஓம் பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டு அங்கிருந்த ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக ஷோலூர் மட்டம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கேரள மாநிலம் வாளையாரைச் சேர்ந்த மனோஜ், சயான், தீபு, சந்தோஷ் சாமி, சதீஷன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிசாமி , வி.கே. சசிகலா, எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோரையும் விசாரிக்க அனுமதி கோரி இந்த வழக்கில் கைதான தீபு, சதீசன், சந்தோஷ்சாமி ஆகியோர் நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீலகிரி மாவட்ட நீதிமன்றம் எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி வழங்கியது. பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து தீபு உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளையில் எஸ்டேட்டில் இருந்து மாயமான பொருட்கள் எவை என்பது சசிகலா, இளவரசிக்குத்தான் தெரியும் என்றும் புலன் விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை என்றும் முக்கிய குற்றவாளிகளை தப்பவிட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் இந்த வழக்கில் பழனிசாமி, சசிகலா ஆகியோரை எதிர்தரப்பு சாட்சியாக விசாரிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வினோத்குமார், கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
இதையடுத்து நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தற்போது முதல்வராக பதவியில் இல்லை என்பதால் அவரை எதிர்தரப்பு சாட்சியாக ஏன் விசாரிக்கக் கூடாது என கருத்து தெரிவித்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இந்த நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி பி.வேல்முருகன், நீலகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிசாமி மற்றும் வி.கே.சசிகலா ஆகியோரையும் விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications