"இப்படியே போனா..." அடுத்தடுத்து டாட்டா காட்டிய தலைகள்.. கடிவாளம் போடும் இபிஎஸ்.. விரைவில் மீட்!?
சென்னை: தமிழ்நாட்டில் நகராட்சி, மாநகராட்சி தேர்தலுக்கு முன்பாக நிர்வாகிகள் பலர் வரிசையாக திமுக பக்கம் செல்வது அதிமுக தலைமைக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. முக்கியமாக கவுன்சிலர்கள் பலர் திமுக பக்கம் செல்வது அதிமுக தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த தேர்தலுக்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. திமுக, அதிமுக இரண்டும் இந்த தேர்தலுக்காக ஏற்கனவே மா.செ கூட்டங்களை நடத்தி முடித்துவிட்டு, தீவிரமாக தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றன.
குறும்படத்தில் ஆர்வம் கொண்ட கணவர்.. சோஷியல் மீடியாவில் பொழுதுபோக்கு.. மனைவி தற்கொலை
ஊரக உள்ளாட்சி
இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பின் சில மாத இடைவெளியில் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடக்கும். வரிசையாக நடக்க உள்ள இந்த தேர்தல்களைத்தான் திமுக குறி வைத்துள்ளது. பெரும்பாலும் டிசம்பர் மாதம் இந்த நகராட்சி தேர்தல் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக திமுக தமிழ்நாடு முழுக்க கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
அதிமுக
இதை முன்னிட்டு அதிமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை திமுக தரப்பு தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. ஒரு பக்கம் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், முன்னாள் எம்பி விஜிலா போன்ற நிர்வாகிகள் திமுக பக்கம் தாவி விட்டனர். இவர்களுடன் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் பலர் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு மாறி உள்ளனர்.
கொங்கு
முக்கியமாக கொங்கு மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் பலர் திமுக பக்கம் சென்றுவிட்டனர். மொத்தமாக கரூர் அதிமுக கூடாரம் காலியாகும் அளவிற்கு 10 கவுன்சிலர்கள் வரை அதிமுகவில் இருந்து திமுக பக்கம் வந்துள்ளனர். இது அதிமுக தரப்பிற்கு தேர்தல் சமயத்தில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல்
தேர்தல் நேரத்தில் அதிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல், நகராட்சி தேர்தல் போன்ற அடிப்படை தேர்தல் வரும் நேரத்தில் இப்படி நிர்வாகிகள் வெளியேறுவது அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இப்படியே போனால் அது அதிமுகவிற்கு பெரிய பின்னடைவை கொடுக்குமென்பதால் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் பேச இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேச உள்ளார்
கொங்கு மண்டல மா.செக்களை விரைவில் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேச இருக்கிறார். கொங்கு மண்டலத்தில் இருந்து பலர் வெளியேறி வரும் நிலையில் நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் அது சிக்கலை ஏற்படுத்த கூடாது என்பதால் இந்த கூட்டம் நடக்க உள்ளது. சமீபத்தில்தான் அதிமுக மா. செ கூட்டம் நடந்து முடிந்தது.
சந்திப்பு
இதனால் கொங்கு மண்டல மாசெக்களுடன் தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின் இபிஎஸ் ஆலோசனை செய்வார் என்று கூறப்படுகிறது. நிர்வாகிகள் கட்சியை விட்டு போகாத வகையில், அவர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் இபிஎஸ் இந்த கூட்டத்தை நடத்துவார். அவர்களின் குறைகளை கேட்டு, யாரும் இனிமேல் திமுக பக்கம் செல்லாத வகையில் இபிஎஸ் ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
நிர்வாகிகள்
கொங்கில் மட்டுமே தற்போது அதிமுக வலுவாக இருக்கிறது, அங்கும் நிர்வாகிகள் வெளியேற்றத்தால் சறுக்கிவிட கூடாது என்பதால் இபிஎஸ் இந்த ஆலோசனையை நடத்த உள்ளார் என்கிறார்கள். முக்கியமாக ஊரக உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் திமுக வென்றால் அது சசிகலாவின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்துவிடும், சசிகலா கை ஓங்கிவிடும் என்பதால் இபிஎஸ் விரைவில் இந்த கூட்டத்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.