அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் எப்போது முடியும்? முதலமைச்சர் காலக்கெடு விதிக்க வேண்டும் -ஈஸ்வரன்
சென்னை: அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகளை முடிக்க முதலமைச்சர் காலக்கெடு விதிக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு விரைவில் துவக்க விழா தேதியை முதலமைச்சர் முடிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வளவு நிதியை முதலீடு செய்து விட்டு திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் இருப்பது மிகப்பெரிய நஷ்டம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கொங்கு ஈஸ்வரன் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

அத்திக்கடவு அவிநாசி
அத்திக்கடவு அவிநாசி திட்டம் கொங்கு மண்டலத்தில் ஏழு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஏரி, குளங்கள் அனைத்தையும் தண்ணீர் நிரப்புகின்ற திட்டம். அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை செறிவூட்டு மேம்படுத்துகின்ற திட்டம். குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு உள்ள தண்ணீர் பற்றா குறையை போக்குகின்ற திட்டம்.

மாரப்ப கவுண்டர்
முதன்முதலாக 1957 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்த மாரப்ப கவுண்டர் இந்த திட்டத்திற்கான கோரிக்கை வைத்தார். 60 ஆண்டு காலமாக இத்திட்டம் கண்டு கொள்ளப்படவில்லை. தேர்தல் கால வாக்குறுதி திட்டமாகவே இது இருந்து வந்தது. கொங்கு நாட்டு மக்களின் தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டே இருந்தன. 2009 லிருந்து 2016 வரை பலவிதமான போராட்டங்கள் பல்வேறு மக்கள் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டன.

2019 பிப்ரவரியில் அடிக்கல்
என் தலைமையிலும் பல கட்ட போராட்டங்கள் நடந்தன. போராட்டங்கள் உச்சந் தொட்டதையொட்டி வேறு வழியே இல்லாமல், 2016- 17 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு 2017-18 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டு திட்டம் துவங்கப்பட்டது. 2021 டிசம்பர் மாதம் திட்ட முடிந்து இருக்க வேண்டும். பல நேரங்களில் இத்திட்டம் ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலக்கெடுவில் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தாமதமாகி கொண்டிருந்த பொழுது 2022 மார்ச் மாதம் நான் நேரடியாக சென்று திட்டப்பாதை முழுதும் ஆய்வு செய்தேன்.

காலக்கெடு நிர்ணயிக்கவும்
2022 ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று பொறியாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. சட்டமன்றத்திலும் அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இன்னும் இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மக்கள் மத்தியில் திட்ட தாமதம் பற்றி பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதற்கு மேலும் தாமதப்படுத்தக் கூடாது. உடனடியாக அத்திக்கடவு அவிநாசி திட்ட துவக்க நாள் முடிவு செய்யப்பட வேண்டும். இவ்வளவு நிதியை முதலீடு செய்து விட்டு திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் இருப்பது மிகப்பெரிய நஷ்டம்.












Click it and Unblock the Notifications