முதலமைச்சர் நிகழ்ச்சியில் கொங்கு ஈஸ்வரன் ஆப்செண்ட்! கொ.ம.தே.க. நிர்வாகியிடம் விசாரித்த ஸ்டாலின்!
சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான இன்று சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சி தலைவரான கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பங்கேற்காத நிலையில், அவர் எங்கே என கொ.ம.தே.க. நிர்வாகி தேவராஜிடம் முதலமைச்சர் ஸ்டாலின் விசாரித்தார்.
அந்தளவுக்கு யார் வந்துள்ளார்கள் யார் வரவில்லை, அதற்கு என்ன காரணம் என்பது வரை முதலமைச்சர் ஸ்டாலின் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தீரன் சின்னமலை
கொங்கு மண்டலத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான இன்று, தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கொங்கு மண்டல அமைச்சர்களான ஈரோடு முத்துச்சாமி, கரூர் செந்தில் பாலாஜி, வெள்ளக்கோவில் சாமிநாதன், ஆகியோர் பங்கேற்றதுடன் அந்த நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பாக முதலமைச்சர் ஸ்டாலினே நேரடியாக கலந்துகொண்டார்.

கொங்கு ஈஸ்வரன்
பொதுவாக தீரன் சின்னமலை பிறந்தநாள், நினைவு நாள் நிகழ்ச்சிகளின் போது அந்த விழாவை ஒருங்கிணைத்து நடத்துவதில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அதிகம் ஆர்வம் காட்டுவார். அதிலும் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என்றால் அந்த நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்துகொள்வார். அண்மையில் கூட ஏப்ரல் மாதம் நடைபெற்ற தீரன் சின்னமலை பிறந்தநாள் விழாவில் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி கவுரவித்தார் ஈஸ்வரன்.

ஈஸ்வரன் பங்கேற்கவில்லை
இந்நிலையில் சென்னையில் தீரன் சின்னமலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்ச்சியில் ஆப்செண்ட் ஆகியிருக்கிறார் கொங்கு ஈஸ்வரன். தனக்கு பதில் கொமதேக மூத்த நிர்வாகி தேவராஜை தனது பிரதிநிதியாக முதல்வர் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்திருந்தார். இதை மிகச் சரியாக கவனித்த முதலமைச்சர் ஸ்டாலின், கிண்டியில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் ஈஸ்வரன் ஏன் வரவில்லை என கொமதேக நிர்வாகியிடம் அக்கறையோடு விசாரித்தார்.

தீரன் சின்னமலை நினைவிடம்
சங்ககிரி அருகே ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இருப்பதால் அவரால் இங்கு வர முடியவில்லை என்ற விளக்கத்தை தேவராஜ் முதலமைச்சரிடம் கூறினார். எத்தனைப் பேர் இருந்தாலும் யார் வந்துள்ளார்கள் யார் வரவில்லை, அதற்கு என்ன காரணம் என்பது வரை முதலமைச்சர் ஸ்டாலின் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications