ஜெய்ஹிந்த்.. கொங்கு ஈஸ்வரன் சட்டசபை பேச்சு.. வெடித்த சர்ச்சை! பாஜக மட்டுமில்ல, காங்கிரசும் எதிர்ப்பு
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம் பெறாதது, தமிழகம் தலைநிமிர்ந்துவிட்டதற்கான அடையாளம் என்று கொங்கு ஈஸ்வரன் சட்டசபையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான ஈஸ்வரன் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துக்கு எச்.ராஜா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் பாஜக ஆதரவாளர்களும், தேசியவாதிகளும் இப்படி ஈஸ்வரன் பேசியிருக்க கூடாது என கூறத் தொடங்கியுள்ளனர்.

கொங்கு ஈஸ்வரன் பேச்சு
அப்படி ஈஸ்வரன் என்ன பேசினார்.. இதோ அவரது வார்த்தைகள்: ஆளுநர் உரையிலேயே அனைத்தையும் சொல்லிவிட முடியாது. இது வெறும் முன்னோட்டம்தான். தமிழக முதலமைச்சருடைய 50 ஆண்டு கால அனுபவத்தை அந்த ஆளுநர் உரையிலே நான் பார்க்கின்றேன். எந்தவிதமான புகழ்ச்சியும் இல்லாமல் ஆக்கபூர்வமான கருத்துக்களைத்தான் அரசு செய்யப்போகிறது என்பதை சொல்லியிருக்கின்றார்.

மக்களுடைய அரசு
எல்லோருக்கும் எல்லாமும்.. என்ற வார்த்தை என்பது ஒரு சின்ன வார்த்தை அல்ல. இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வந்த வார்த்தைகளை போட்டிருக்கிறார்கள். "என்னுடைய அரசு என்னுடைய அரசு" என்று இந்த மன்றத்தில் உரையாற்றியதையெல்லாம் பார்த்து இருக்கின்றோம். ஆனால், இந்த அரசு மக்களுக்கான அரசு என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

ஊழல் பற்றி கேட்கவில்லையே
தேர்தல் அறிக்கையில் அதைச் சொன்னார்கள், தேர்தல் பிரச்சாரத்தில் இதைச் சொன்னார்கள்.. என்றெல்லாம் இந்த மன்றத்திலே பேசப்பட்டது. அதே தேர்தல் பிரச்சாரத்தில் தான் இப்போது முதலமைச்சர் மற்றும் கட்சியினுடைய தலைவர்கள் எல்லாம் ஊழல் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார்கள். அதை ஏன் ஆளுநர் உரையில் போடவில்லை என்று யாராவது கேட்டார்களா? அதையும் கேட்டிருக்க வேண்டியதுதானே?

ஆக்கப்பூர்வ கருத்துக்கள்
கடந்த ஆட்சியின் சாதனைகள் எல்லாம் மக்கள் மன்றத்தில் சொல்லி தோற்றுப்போனவை. அவைகளை சட்டசபையில் சொல்லி வெற்றிபெற வைக்க முடியுமா. ஆக்கபூர்வமான கருத்துக்களைத்தான் இந்த அரசு விரும்புகிறது, எதிர்பார்க்கிறது. அது ஆளுநர் உரையில் கொல்லப்பட்டுள்ளது.

ஜெய் ஹிந்த் வார்த்தை இல்லை
ஆளுநர் உரையை படித்தவுடனேயே தமிழகம் தலை நிமிர்ந்து விட்டது என்பதை புரிந்து கொண்டேன். ஒரு வரியில் சொல்லவேண்டும் என்று சொன்னால், சென்ற ஆளுநர் உரையை நான் பார்த்தேன். கடைசியிலே, நன்றி, வணக்கம், ஜெய் ஹிந்த் என்று போட்டிருக்கிறது. ஆனால் இந்த ஆளுநர் உரையிலே அந்த ஜெய்ஹிந்த் இல்லை என்பதை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று முதலமைச்சர் டெல்லியில் சொன்னதை இந்த அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்தும் என்ற அந்த நம்பிக்கை இன்று வந்திருக்கிறது. இவ்வாறு ஈஸ்வரன் பேசினார்.

நெட்டிசன்கள் கருத்து
ஜெய் ஹிந்த் என்பது தமிழரால் சொல்லப்பட்ட வார்த்தை, நேதாஜியால் இந்திய அளவில் புகழ்பெறச் செய்யப்பட்ட வார்த்தை, இப்போதும் ராணுவத்தில் அதிகாரிகள் மத்தியில் அந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது, தேசப்பற்றை நினைவுபடுத்துகிறது என்று நெட்டிசன்கள் வரிசையாக ஈஸ்வரன் கருத்துக்கு எதிர்கருத்து கூறுவதை பார்க்க முடிகிறது.

பாஜக கோபம்
இன்னொரு பக்கம், பாஜக சீனியர் தலைவர் எச்.ராஜா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இதைப்போல ஒரு தேசவிரோத கருத்து இருக்க முடியாது ஈஸ்வரன் போன்றவர்கள் ஈஸ்வரனின் கோவத்திற்கு ஆளாக வேண்டாம். என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரசுக்கும் அதிருப்தி
காங்கிரஸ் தலைவர்களும் ஈஸ்வரன் பேச்சால் அதிருப்தியடைந்துள்ளனர். காங்கிரஸ் துணைத் தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஜெய்ஹிந்த் என்பது தவறான வார்த்தை அல்ல. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் , சட்டசபையில் திரு ஈஸ்வரன் MLA அவர்களிடம் இருந்து விளக்கம் பெற வேண்டும் ! என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications