சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை...விரைவில் திறப்பா... பன்னீர் செல்வம் நேரில் ஆய்வு!!
சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மே 5ஆம் தேதி கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. இந்த நிலையில் இந்த சந்தையை மீண்டும் திறப்பது தொடர்பாக கோயம்பேட்டில் இன்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதற்கு முன்னதாக சென்னை பெருநகர வளா்ச்சி குழும அதிகாரிகள் ஆய்வுகளை முடித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா தொற்று பெரிய அளவில் பரவியதை அடுத்து, கடந்த மே மாதம் 5-ஆம் தேதி சந்தை மூடப்பட்டது. புறநகரில் இருக்கும் திருமழிசை பகுதிக்கு தற்காலிகமாக மொத்த காய்கறி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மொத்த பழ வியாபாரம் மாதவரம் பேருந்து நிலையத்துக்கும், பூக்களின் மொத்த விற்பனை வானகரம் பகுதிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டன.
திருமழிசைக்கு காய்கறி சந்தையை மாற்றுவதற்கு பெரிய அளவில் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். திருமழிசைக்கு காய்கறிகளை கொண்டு செல்வதற்கு தங்களுக்கு வசதி இல்லை என்று வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும், அனைத்து காய்கறி வியாபாரிகளுக்கும் அங்கு இடம் ஒதுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்து இருந்தனர். போதிய இடவசதி இல்லாத காரணத்தினால், வாகனங்களை நிறுத்த முடியாமல் சிரமப்பட்டனர். சந்தைக்கு காய்கறிகளை கொண்டு செல்ல முடியாமல் சாலையில், குப்பையில் காய்கறிகளை சில வியாபாரிகள் கொட்டிச் சென்றனர்.
இந்த நிலையில் மீண்டும் சந்தையை திறக்க வேண்டும் என்று கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்து இருந்தனர். அந்தக் கடிதத்தில், பொதுமக்களின் நலன் கருதி கோயம்பேடு சந்தையை சுத்தம் செய்து மீண்டும் திறக்க வேண்டும். காய்கறி, பூ, பழம், மீன், இறைச்சி சந்தைகளை கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிக்க வேண்டும். உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.
திரும்பும் இயல்பு நிலை?- லாக்டவுனுக்கு பின் ஊழியர்களின் பிஎப் தொகையை செலுத்திய 1,50,000 நிறுவனங்கள்
அப்போது, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று கோயம்பேடு சந்தையில் சி.எம்.டி.ஏ உறுப்பினா் செயலா் காா்த்திகேயன், அங்காடி நிா்வாக குழு அதிகாரி கோவிந்தராஜன் ஆகியோா் ஆய்வு செய்தனா். இதையடுத்து முதலில் காய்கறி திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அடுத்த கட்டமாக இன்று துணை முதல்வர் பன்னீர் செல்வம், உயர் அதிகாரிகளுடன் கோயம்பேடு சந்தையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து விரைவில் கோயம்பேடு காய்கறி சந்தை திறக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.